Powered By Blogger

Saturday, September 22, 2012

மதிப்பிற்குரிய வேலைக்காரி – மொழிபெயர்ப்புக் கட்டுரை




Maid of honour
 - Antara Dev Sen, Deccan Chronicle, 15-09-2012

      
மீண்டும் இது துவக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. நம் நன்மதிப்புமிக்க ஆனால் இறுதியை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் முட்டாள்தனமான அரசாங்கம் மற்றுமொரு புதுமையான வரைவுடன் வந்திருக்கிறது. வெளிப்படையாகவே அது கணவனிடமிருந்து வீட்டுப் பராமரிப்பை மேற்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு ஊதியத்தைப் பெறும் வழியை யோசித்துக் கொண்டிருக்கிறது.

’’நல்லது, ஊதியம் என்றில்லை.. இதனை என்னவென்று அழைக்கலாம்? வெகுமதி அல்லது வேறு ஏதேனும் பெயரிட்டுக் கொள்ளலாம்’’ என்று சொல்லியிருக்கிறார், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத்.

இதிலுள்ள அசௌகரியம் தெளிவாகவே புலனாகிறது.. இல்லத்தின் கம்பீரமான பெண்மணியான நீங்கள், உங்கள் கணவரின் இதய தெய்வமான நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு அருமையான நல்ல வழிகாட்டியான நீங்கள், மாறுபாடுகளைக் கொண்டவரும், ஆனால் பணிவான மருமகளான நீங்கள், மிகுந்த இரக்கமுள்ளதும் அதிகாரமுள்ள பெண்ணான நீங்கள், வீட்டுப் பராமரிப்பிற்காக கூலி பெறும் ஒரு வேலைக்காரியின் நிலைக்கு உங்களைத் தாழ்த்திக் கொள்வீர்களா? அநேகமாக மாட்டீர்கள்.

ஆனால் நியாயமாக இந்த வரைவானது நிச்சயமாக உங்களைப் போன்றவர்களுக்கானதல்ல. இந்த மசோதா தாங்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் எந்த பிரதிபலனும் பார்க்காமல் தன் குடும்பத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்டும், வீட்டைப் பரமாரித்துக் கொண்டு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கானது. முதுமையில் பலமிழந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டு எந்த சேமிப்பும் இல்லாமல் வேறெங்கும் போக வழியில்லாத தங்கள் சொத்துக்களையெல்லாம் பிரியமான குழந்தைகளுக்கு அளித்த பின் அவர்களாலேயே விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கானது.

ஆம், பொருளாதாரச் சுதந்திரம், நாம் அனைவரும் இப்பொழுது உணர்ந்து கொண்டபடி பொருளாதாரச் சுதந்திரம் பெண்கள் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இதற்கு முன்னரும் கூட இந்தியாவில் இல்லத்தரசிகளுக்கான தொழிற்சங்கம் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இல்லத்தரசிகளுக்கான கூலி என்ற பொதுவான கோரிக்கை புதிதானதல்ல. 1925-இல் வெளியான wages for wives என்ற ஹாலிவுட் நகைச்சுவை இல்லத்தரசி எவ்வளவு வேலைகளைச் செய்கிறாள் என்பதையும் அவள் கணவனின் வருமானத்தில் பாதியை ஏன் கோருகிறாள் என்பதையும் நியாயப்படுத்தியது. தவிர, பல தசாப்தங்களாக பெண்ணுரிமைக்குப் போராடுவர்களும் கூட இல்லத்தரசிகளுக்கான ஊதியத்தைக் கோரிக்கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்க ஏன் நாம் இந்த பரிந்துரையினால் பெரிதும் மகிழ்ச்சியடையக் கூடாது?

ஏனெனில் பெண்களுக்கு அதிகாரமளித்து மேம்படுத்துவதற்குப் பதில், இந்த வரைவு அவர்களை மேலும் கீழ்நிலைப்படுத்திவிடும்.

முதற்கண் துணைவியானவள் திருமண பந்தத்தில் சம உரிமை கொண்டவளாக இருக்க வேண்டும். அவளை வீட்டுப் பரமாரிப்புக்காக கூலி பெரும் நிலைக்குத் தள்ளுவதென்பது அவளை அவமதிப்பது மட்டுமல்ல; குடும்ப அதிகாரச் சமநிலை உறவுகளையும் இது வெகுவாகப் பாதிக்கும். அனைத்திற்கும் மேல் வீட்டு வேலைக்காரிக்கு இருக்கும் சுதந்திரம்  கூட அவளுக்கு இல்லாமல் போய்விடும். அவள் கிட்டத்தட்ட ஒரு கொத்தடிமையைப் போல், வெளியேறவும் முடியாமல், அவளைச் சுற்றியிருக்கும் சிறந்தவற்றைத் தெரிவு செய்யவும் முடியாமல் அவளது விதி பிரிக்க முடியாத அளவிற்கு அவளது எஜமானனின் குடும்பத்துடன் பின்னிப்பிணைந்து விடும்.

இரண்டாவதாக, திருமண பந்தத்தில் சம உரிமை கொண்டவளாக, துணைவியானவள் தன் துணையின் வருமானம் மற்றும் சொத்துக்களில் சரிபாதிக்கு உரிமையானவள். அவளுக்குத் தன் கணவனின் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத் தருவதென்பது ஏமாற்று வேலையாக இருக்கும்.

மூன்றாவதாக, இந்தியாவில், வருவாய் பெண்களுக்கான சுதந்திரத்தையோ பெண்கள் மேம்பாட்டையோ உறுதி செய்யவில்லை. கணவன் தன் மனைவியின் வருமானத்தைத் தக்கவைத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளான். மேலும் மனைவியானவள் இன்னும் வீட்டிற்குள் கூட முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவளாகியிருக்கவில்லை. 2005-06-இன் ஒரு தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி(NFHS) திருமணமான பெண்களில் 20 முதல் 24 சதவிகிதத்தினரே தங்கள் சம்பாத்தியத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். எஞ்சியவர்கள், அதாவது கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பெண்களின் வருமானம் முழுவதுமோ அல்லது அதில் பெரும்பகுதியோ அவளது கணவனாலோ அல்லது மற்றவர்களாலோ கட்டுப்படுத்தப்படுகிறது.

நான்காவதாக, அவள் வீட்டில் செய்யும் வேலைகளுக்காக அவளது கணவனிடமிருந்து அவனது வருமானத்தின் பகுதியைப் பெற்றுத் தரும் யோசனை தவறானது. குறைபாடுகளைக் கொண்டது. கணவன் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது மனைவியின் வருமானம் நின்று விடுகிறது, ஆனால் அவளது வேலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவள் இப்பொழுது முதுமையடைந்து விட்டதால் அவளது பணி மிகுந்த சிரமமானதாகவே இருக்கும். வேலையின் மீதான எதிர்பார்ப்புகள் முன்னமிருப்பது போலவே தொடரும்பொழுது, ஒரு ஊதியக் கட்டமைப்பில் வருமானம் எதேச்சதிகாரமாக நிறுத்தப்படக்கூடாது(அல்லது திடீரென்று குறைந்து விடக்கூடாது-கணவனின் ஓய்வூதியத்தின் சிறு பகுதியை அவளது வருமானமாக எடுத்துக் கொள்ளும்போது).

ஐந்தாவதாக, வர்த்தகம் சாராத, மதிப்பிடமுடியாத ஒன்றிற்கு இவ்வாறான சந்தை சார்ந்த அணுகுமுறை நியாயமற்றது. அர்ப்பணிப்பு உணர்வை, ஈடுபாட்டை, மனைவி மட்டும் தாயின் அபரிமிதமான உரிமை கொண்டாடும் உணர்வை எவ்விதம் ஒருவர் பணத்தினைக் கொண்டு நிர்ணயம் செய்ய இயலும்? வீட்டுப் பராமரிப்பிற்குக் கணக்கு பார்ப்பது முற்றிலும் தவறானது. மேலும் வீட்டைப் பராமரிப்பதற்காகத் தங்கள் வேலையைத் துறந்தவர்களுக்கு இது ஈடு செய்யப்போவதில்லை. அவளுடைய வேலைகளில் இதுவும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. உணர்வுசார்ந்தும் அறிவுசார்ந்தும் உடலுழைப்பில் ஈடுபடும் துணைவி மற்றும் அன்னையரின் பணிகள் எப்பொழுதும் கருத்தில் கொள்ளப்படாது.

ஆறாவதாக, இந்த வரைவின்படி மனைவியானவள் எப்பொழுதும் தன் கணவனை விட அதிகமாக சம்பாதித்துவிட முடியாது அல்லது அவள் ஒரு பெரு நிறுவனத்தில் வேலை செய்வதாக சொல்லிக்கொள்ள இயலாது. அனைத்தையும் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது நாம் இல்லத்தரசிகளை அடக்கி ஒரு வரையறுக்கப்பட்ட ஒப்பீட்டின் கீழ் நிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறோம்.அவள் எப்பொழுதுமே தன் கணவனுக்கு அடிமையாகவே, குறைந்த ஊதியம் பெறுபவளாக, ஒரு நல்ல மனைவியாக, தாயாக வார்த்தைகளில் வடிக்க இயலாத நற்செயல்கள் செய்பவர்கள் எதனையும் பெறாதவர்களாவே இருக்கிறார்கள்.

ஏழாவதாக பெண்கள் தங்கள் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு அவளது கணவனைச் சார்ந்திருப்பது குறைக்கப்படவேண்டுமேயன்றி அதிகப்படுத்தக் கூடாது.

ஆக, பெண்ணியவாதிகள் இல்லத்தரசிகளுக்காக ஊதியம் கோரிக் கொண்டிருந்ததெல்லாம் தவறானதா? நாம் இன்னும் கொஞ்சம் தெளிவாக பார்க்கலாம். சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் செய்யும் பங்களிப்புக்கு அங்கீகாரம் வேண்டும், உழைப்புக்குப் பணமதிப்பு வேண்டும் எனும் தீவிர தேவையிலிருந்து பெண்ணியவதிகளின்  அறைகூவல் கிளம்பியது. கவனிப்பது, கணக்கில் கொள்வது, மதிப்பளிப்பது எனும் தேவைகளை அது முன்னிறுத்துகிறது. பெண்கள் செய்யும் வேலைக்கு எல்லையே இல்லை, ஆனாலும் அது அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த கூவலானது உரிமை, சட்டபேறு பற்றியது, பணம் பற்றியது மட்டுமல்ல. மறைக்கப்படுவது, உரிமை நிராகரிப்பு மற்றும் சமூக நிராகரிப்பு பற்றிய பிரச்சனை இது. பணம் என்பது ஒரு எல்லைவரை மதிப்பைக் கொடுக்கிறது. உங்களை, உங்கள் குடும்பத்தை பாதிக்கும் விசயங்கள் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அது வழங்குகிறது அவ்வளவுதான்.

மணமான பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு அவள் சம உரிமை கொண்டவளாக இருப்பதை, தன் கணவனின் சொத்துக்கள், முதலீடுகள் போன்றவற்றை கையாளும் உரிமை கொண்டவளாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதிருக்கிறது. மனைவியின் வருமானத்தின் மீது கணவனுக்கும் அத்தகைய உரிமை உண்டு.  திருமணம் என்பது சமமான பங்கீடைப் பற்றியது, ஒருவர் முன் அலுவலகத்தைக் கவனித்தால் மற்றொருவர் பின்னால் இருக்கும் வேலைகளைக் கவனிக்கிறார்.

அரசாங்கம் பெண்களின் நிலையை உயர்த்துவதற்குப் பொதுவான சிலவற்றின் மூலம் உதவலாம். சம உரிமகளுக்கான விழிப்புணர்வை உண்டாக்குவதன் மூலமும், ஆண் பெண் செய்யும் வேலைகளுக்கு எவ்வித பாகுபாடுமில்லாமல் சம ஊதியத்தை உறுதி செய்வதன் மூலமும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துவதன் மூலமும் உதவலாம். பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் செவ்வனே பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு, குடும்ப வன்முறை சம்பந்தமான கிட்டத்தட்ட 15000 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஏன் ஒன்றிற்குக் கூட இன்னும் தீர்ப்பு வராமல் நிலுவையில் உள்ளது?

நிதி மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தம்பதியினரின் கூட்டுக் கணக்கிற்கு, இல்லத்தரசிகளின் முதலீட்டிற்கு அரசு வரிசலுகைகள் தரலாம். திருமணமானவர்கள் அது ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களது ஊதியம் இருவரும் சேர்ந்து துவங்கிய கூட்டுக் கணக்கில் சேர்க்குமாறு பரிந்துரைக்க முடியும். சம உரிமைகள் மற்றும் சம அணுகுமுறையை மேம்படுத்துதலில் மட்டுமே அரசின் கவனம் இருக்க வேண்டும்.

ஆனால் மிக முக்கியமாக, இன்றியமையாத, ஊதியமில்லாத வேலைகளுக்கு (சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் மனைவி அல்லது தாய் ஆக்கப்பூர்வமாகவும் இணையான பங்கு வகிப்பதைப் போன்ற) அரசு வெகுமதி அளிக்க முன்வந்ததற்கு நாம் புத்துயிர் அளிக்க முடியும். இது பாராட்டுதல், மரியாதை, மேன்மை, சுயமரியாதை, கௌரவம், குடும்பத்தில் முடிவெடுக்கும் உரிமை போன்றவற்றை உள்ளடக்கியது. சுருங்கக் கூறின், நாம் பெண்களின் சேவைகளுக்கு பண நிர்ணயம் செய்வதை ஒதுக்கிவைத்துவிட்டு நல்வாழ்விற்கு மதிப்பு தருபவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

மொழிபெயர்ப்பில் உதவி - கொற்றவை