Powered By Blogger

Sunday, April 1, 2012

படிப்பும் விடுதலைக்கான அறிவும் - மருதையன்


படிப்பும் விடுதலைக்கான அறிவும் - மருதையன்

 ம.க.இ.க. பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பேசிய உரையினை நூலாக்கியுள்ளனர் கீழைக்காற்று பதிப்பகத்தார்...

எனது நன்றிகள் கீழைக்காற்று பதிப்பகத்தாருக்கும் மற்றும் பதிப்பகத் தோழர்களுக்கும்...புத்தகக் கண்காட்சியில் இந்த நூலையும் இன்னும் சில நூல்களையும் பரிந்துரைத்தமைக்கு...

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் பெரும்பாலான நேரங்களை மாத வார இதழ்களைப் படிப்பதிலேயே செலவிட்டுக் கொண்டிருப்பேன்.. கைகளில் பாடப்புத்தகங்களை விட அந்த இதழ்களே அதிக நேரம் அமர்ந்திருக்கும்..கல்லூரி நாட்களில் இலக்கியவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் எவரும் வாய்க்கவில்லை...நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். இன்றும் கூட அதிகம் இல்லை.. ஆனால் ஆர்வம் காரணமாகவும் கிடைத்த நல்ல நட்புக்களின் உதவியினாலும் கிடைக்கும் நேரத்தில் இப்பொழுது சற்று அதிகம் வாசித்தும் கொண்டிருக்கிறேன்.. கருத்துமுதல்வாதம்,பொருள்முதல்வாதம் என்று ஆரம்பப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.

 இந்த நேரத்தில் கைகளில் கிடைத்தது இந்நூல்.. எப்படி படிக்க வேண்டும் என்பதை விட எதற்காக படிக்கிறோம் என்பது வாசித்தலின் ஆர்வத்தை மேம்படச் செய்வதுடன் வாசித்தலுக்கான சிறந்த இலக்கின் அவசியத்தை உணர்த்துகிறது...நம்மையுமறியாமல் முதலாளித்துவத்தின் ஆளுகைக்குட்பட்டு பிள்ளைகளைக் கசக்கி பிழிந்து அவர்களைச் சோர்வாக்குவதுடன் அவர்களது ஆளுமைத் திறனையும் குறைத்து விடுகிறோம்.அவர்களின் மீது கொண்டுள்ள அக்கறை என்று பெற்றோர்கள் கூறுவது எவ்வகையில் சேர்ப்பது... சமூகம் முதலாளித்துவத்திற்கு ஆட்பட்டு சீர்குலையும் நிலையில் தனது பிள்ளைகளையும் ’அவர்களுக்கேற்றார் போல்’ தயார்செய்து (முதலாளி தன் நிறுவனத்திற்காக இயந்திரங்களைத் தயாரிப்பதும் வாங்குவதையும் போல்) அவர்களுக்கு அர்ப்பணிப்பது எப்படி அக்கறையாகும்.. சமூகமும் ஊடகமும் எவ்வாறு ஒருவனை சோர்வாக்குகிறது என்று மட்டுமில்லாமல் அவனது ஆற்றலை எவ்வாறு அழிக்கிறது என்பதையும் அழகாக பேசியிருக்கிறார்.

புத்தகத்தின் உள்ளே உள்ள தலைப்புகளில் சில..

காரியவாத படிப்பும், காலியாகும் ஆளுமையும்!
உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன் தலைமுறை அறியாது!
முதலாளித்துவம் உருவாக்கும் சிந்தனையற்ற விலங்குகளாய் நாம்!
படிப்பு உழைப்பாக மாறும்போது சமூகம் அடிமைத்தளையிலிருந்தும் விடுபடும்!

ஒரு நோக்கமில்லாமல் படிப்பதை விமர்சனம் செய்யும் தோழரின் வார்த்தைகள்....

அந்த காலத்தில் கண்டதை வாங்கிப் படித்துக்கொண்டிருப்பேன்.ஒரு சமயம் ஒரு தோழருடன் ஒரு நூல் பற்றி விவாதிக்க வேண்டியிருந்தது.அதைப் படிக்காமல் ஏதோ Sunday அல்லது India Today வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது அவர் நான் இன்ப நாட்டத்திற்காகவே படிப்பதாகக் கூறினார்.அப்போது எனக்கு புரியவில்லை.. நாம் சீரியசாகத்தானே படிக்கிறோம்.இதிலென்ன pleasure என்று நினைத்தேன்.உங்கள் தனிப்பட்ட இன்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்று அவர் சொன்னார்.அது உண்மை. அது ஒரு இலக்கற்ற படிப்பு.அப்படிப் படிப்பதிலேயே ரசனை கொண்ட ஒரு இலக்கியவாத கூட்டம் இருக்கிறது.

 என்று தொடர்கிறது தோழரின் வார்த்தைகள்..

 கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதலில் சில நூல்களையோ அல்லது கட்டுரைகளையோ படிக்கும்போது சிலது புரியாமல் நம்மைச் சோர்வடையச் செய்யும்.அதைப் போன்ற அனுபவம் எனக்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார்போல் நமது அறிவை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாய் முன்னிறுத்துகிறது இவரது வார்த்தைகள்.அதை விடுத்து எழுத்தாளரை அவர் புரியாதபடிக்கு எழுதுகிறார்;இன்னும் இலகுவாக எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்.

மார்க்ஸ் நூலையோ, லெனின் நூலையோ, அப்படி ஆய்வுப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக எழுதுகின்ற நூல்கள் அல்லது ஆழ்ந்து உணர்ந்து எழுதப்படக்கூடிய இலக்கியங்கள், கவிதைகள் இவையெல்லாம் SUN TV, TIMES NOW மாதிரி பார்க்க முடியாது. படிக்க வேண்டும்.இன்னொரு முறை படிக்க வேண்டும்.பிறகு அதில் தங்கி நின்று சிந்திக்க வேண்டும். புரியவில்லை என்றால் கேட்க வேண்டும்.படித்தவர்களோடு விவாதிக்க வேண்டும்.புரியாத இடத்தைக் குறித்து வைத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும்’ என்கிறார்.இப்பொழுது படிப்பதில் ஒன்றும் எனக்கு பிரச்சினை இல்லை.நேரம் கிடைக்குபொழுதெல்லாம் படித்துவிட முடியும்.. சிந்திக்கவும் அதனைப் பற்றி புரியாதபட்சத்தில் விவாதிக்கவும் நண்பர்கள் இன்னும் அதிகம் தேவையாயிருக்கிறது. தேடுதலும் மிக அவசியம்தானே!

 படிப்பதும் ஒருவகையில் உழைப்பே என்கிறார் தோழர். நம் ஆர்வத்திற்காக மட்டுமின்றி வாசித்தலில் ஒரு நோக்கமும் இலக்கும் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகவே உணர்த்துகிறது இவரது வார்த்தைகள்..

மேலும் மக்கள் கருத்தியல் ரீதியான ஒரு ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த சமூகம்தான் நியாயமானது,இந்த சமூகம்தான் சாத்தியமானது என்று மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அநீதிக்கு உட்படுத்தப்படும் மக்கள் கூட இந்த அநீதி தவிர்க்கப்படமுடியாதது என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படி கருத்துரீதியாக அடங்கியிருப்பதால்தான் அடங்கி இருக்கிறார்கள்.அதற்குப் பிறகு அடங்காமல் போனால்தான் துப்பாக்கிமுனை என்கிறார்.

கருத்துரீதியான ஆளுகைக்கு முதலாளிகளுக்கு கைகொடுப்பது மதமும் அதைத் தொடர்ந்த கடவுள் நம்பிக்கையும்.. இது சம்பந்தமான ஒரு வெற்று பிம்பத்தை மக்களிடம் பரவலாக்கி அதனை மீறி யோசிக்க விடாமல் தங்கள் ஆளுகைக்குள்ளாகவே வைத்திருப்பதில் இவற்றின் பங்கும் கணிசமாக இருக்கிறது.

 கம்யூனிசம், பெரியார்-அம்பேத்கரியக் கொள்கைகளால் பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடத் தேவையான ஆற்றலை இலக்குடன் கூடிய படிப்பின் துணைகொண்டே அடையமுடியும் என்கிறார் தோழர் மருதையன்.

ஒவ்வொருவருக்கும் போராட வேண்டும் என்று அவசியம் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் தங்களின் சமூகத்தைப் பற்றியும் அது எதைநோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றியும் ஒரு பரந்த பார்வை அவசியம்.அதனை இலக்குடன் கூடிய படிப்பு மற்றும் விவாதத்தின் துணையுடன் நிச்சயம் அடையலாம் என்பதை தெளிவாக விளக்கும் முப்பது பக்க நூல்.

No comments:

Post a Comment