Powered By Blogger

Saturday, September 22, 2012

மதிப்பிற்குரிய வேலைக்காரி – மொழிபெயர்ப்புக் கட்டுரை




Maid of honour
 - Antara Dev Sen, Deccan Chronicle, 15-09-2012

      
மீண்டும் இது துவக்கத்திற்கு இட்டுச்செல்கிறது. நம் நன்மதிப்புமிக்க ஆனால் இறுதியை எதிர் நோக்கிக் கொண்டிருக்கும் முட்டாள்தனமான அரசாங்கம் மற்றுமொரு புதுமையான வரைவுடன் வந்திருக்கிறது. வெளிப்படையாகவே அது கணவனிடமிருந்து வீட்டுப் பராமரிப்பை மேற்கொள்ளும் இல்லத்தரசிகளுக்கு ஊதியத்தைப் பெறும் வழியை யோசித்துக் கொண்டிருக்கிறது.

’’நல்லது, ஊதியம் என்றில்லை.. இதனை என்னவென்று அழைக்கலாம்? வெகுமதி அல்லது வேறு ஏதேனும் பெயரிட்டுக் கொள்ளலாம்’’ என்று சொல்லியிருக்கிறார், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கிருஷ்ணா தீரத்.

இதிலுள்ள அசௌகரியம் தெளிவாகவே புலனாகிறது.. இல்லத்தின் கம்பீரமான பெண்மணியான நீங்கள், உங்கள் கணவரின் இதய தெய்வமான நீங்கள், உங்கள் குழந்தைகளுக்கு அருமையான நல்ல வழிகாட்டியான நீங்கள், மாறுபாடுகளைக் கொண்டவரும், ஆனால் பணிவான மருமகளான நீங்கள், மிகுந்த இரக்கமுள்ளதும் அதிகாரமுள்ள பெண்ணான நீங்கள், வீட்டுப் பராமரிப்பிற்காக கூலி பெறும் ஒரு வேலைக்காரியின் நிலைக்கு உங்களைத் தாழ்த்திக் கொள்வீர்களா? அநேகமாக மாட்டீர்கள்.

ஆனால் நியாயமாக இந்த வரைவானது நிச்சயமாக உங்களைப் போன்றவர்களுக்கானதல்ல. இந்த மசோதா தாங்கள் தங்கள் வாழ்க்கை முழுவதையும் எந்த பிரதிபலனும் பார்க்காமல் தன் குடும்பத்திற்காகவே அர்ப்பணித்துக் கொண்டும், வீட்டைப் பரமாரித்துக் கொண்டு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கானது. முதுமையில் பலமிழந்த காலத்தில் புறக்கணிக்கப்பட்டு எந்த சேமிப்பும் இல்லாமல் வேறெங்கும் போக வழியில்லாத தங்கள் சொத்துக்களையெல்லாம் பிரியமான குழந்தைகளுக்கு அளித்த பின் அவர்களாலேயே விரட்டியடிக்கப்பட்டவர்களுக்கானது.

ஆம், பொருளாதாரச் சுதந்திரம், நாம் அனைவரும் இப்பொழுது உணர்ந்து கொண்டபடி பொருளாதாரச் சுதந்திரம் பெண்கள் முன்னேற்றத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. இதற்கு முன்னரும் கூட இந்தியாவில் இல்லத்தரசிகளுக்கான தொழிற்சங்கம் நிறுவுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் இல்லத்தரசிகளுக்கான கூலி என்ற பொதுவான கோரிக்கை புதிதானதல்ல. 1925-இல் வெளியான wages for wives என்ற ஹாலிவுட் நகைச்சுவை இல்லத்தரசி எவ்வளவு வேலைகளைச் செய்கிறாள் என்பதையும் அவள் கணவனின் வருமானத்தில் பாதியை ஏன் கோருகிறாள் என்பதையும் நியாயப்படுத்தியது. தவிர, பல தசாப்தங்களாக பெண்ணுரிமைக்குப் போராடுவர்களும் கூட இல்லத்தரசிகளுக்கான ஊதியத்தைக் கோரிக்கொண்டிருக்கின்றனர். அப்படியிருக்க ஏன் நாம் இந்த பரிந்துரையினால் பெரிதும் மகிழ்ச்சியடையக் கூடாது?

ஏனெனில் பெண்களுக்கு அதிகாரமளித்து மேம்படுத்துவதற்குப் பதில், இந்த வரைவு அவர்களை மேலும் கீழ்நிலைப்படுத்திவிடும்.

முதற்கண் துணைவியானவள் திருமண பந்தத்தில் சம உரிமை கொண்டவளாக இருக்க வேண்டும். அவளை வீட்டுப் பரமாரிப்புக்காக கூலி பெரும் நிலைக்குத் தள்ளுவதென்பது அவளை அவமதிப்பது மட்டுமல்ல; குடும்ப அதிகாரச் சமநிலை உறவுகளையும் இது வெகுவாகப் பாதிக்கும். அனைத்திற்கும் மேல் வீட்டு வேலைக்காரிக்கு இருக்கும் சுதந்திரம்  கூட அவளுக்கு இல்லாமல் போய்விடும். அவள் கிட்டத்தட்ட ஒரு கொத்தடிமையைப் போல், வெளியேறவும் முடியாமல், அவளைச் சுற்றியிருக்கும் சிறந்தவற்றைத் தெரிவு செய்யவும் முடியாமல் அவளது விதி பிரிக்க முடியாத அளவிற்கு அவளது எஜமானனின் குடும்பத்துடன் பின்னிப்பிணைந்து விடும்.

இரண்டாவதாக, திருமண பந்தத்தில் சம உரிமை கொண்டவளாக, துணைவியானவள் தன் துணையின் வருமானம் மற்றும் சொத்துக்களில் சரிபாதிக்கு உரிமையானவள். அவளுக்குத் தன் கணவனின் வருமானத்தில் ஒரு சிறு பகுதியைத் தருவதென்பது ஏமாற்று வேலையாக இருக்கும்.

மூன்றாவதாக, இந்தியாவில், வருவாய் பெண்களுக்கான சுதந்திரத்தையோ பெண்கள் மேம்பாட்டையோ உறுதி செய்யவில்லை. கணவன் தன் மனைவியின் வருமானத்தைத் தக்கவைத்துக் கொள்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளான். மேலும் மனைவியானவள் இன்னும் வீட்டிற்குள் கூட முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவளாகியிருக்கவில்லை. 2005-06-இன் ஒரு தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி(NFHS) திருமணமான பெண்களில் 20 முதல் 24 சதவிகிதத்தினரே தங்கள் சம்பாத்தியத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். எஞ்சியவர்கள், அதாவது கிட்டத்தட்ட ஐந்தில் நான்கு பெண்களின் வருமானம் முழுவதுமோ அல்லது அதில் பெரும்பகுதியோ அவளது கணவனாலோ அல்லது மற்றவர்களாலோ கட்டுப்படுத்தப்படுகிறது.

நான்காவதாக, அவள் வீட்டில் செய்யும் வேலைகளுக்காக அவளது கணவனிடமிருந்து அவனது வருமானத்தின் பகுதியைப் பெற்றுத் தரும் யோசனை தவறானது. குறைபாடுகளைக் கொண்டது. கணவன் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது மனைவியின் வருமானம் நின்று விடுகிறது, ஆனால் அவளது வேலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவள் இப்பொழுது முதுமையடைந்து விட்டதால் அவளது பணி மிகுந்த சிரமமானதாகவே இருக்கும். வேலையின் மீதான எதிர்பார்ப்புகள் முன்னமிருப்பது போலவே தொடரும்பொழுது, ஒரு ஊதியக் கட்டமைப்பில் வருமானம் எதேச்சதிகாரமாக நிறுத்தப்படக்கூடாது(அல்லது திடீரென்று குறைந்து விடக்கூடாது-கணவனின் ஓய்வூதியத்தின் சிறு பகுதியை அவளது வருமானமாக எடுத்துக் கொள்ளும்போது).

ஐந்தாவதாக, வர்த்தகம் சாராத, மதிப்பிடமுடியாத ஒன்றிற்கு இவ்வாறான சந்தை சார்ந்த அணுகுமுறை நியாயமற்றது. அர்ப்பணிப்பு உணர்வை, ஈடுபாட்டை, மனைவி மட்டும் தாயின் அபரிமிதமான உரிமை கொண்டாடும் உணர்வை எவ்விதம் ஒருவர் பணத்தினைக் கொண்டு நிர்ணயம் செய்ய இயலும்? வீட்டுப் பராமரிப்பிற்குக் கணக்கு பார்ப்பது முற்றிலும் தவறானது. மேலும் வீட்டைப் பராமரிப்பதற்காகத் தங்கள் வேலையைத் துறந்தவர்களுக்கு இது ஈடு செய்யப்போவதில்லை. அவளுடைய வேலைகளில் இதுவும் ஒன்றாக எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. உணர்வுசார்ந்தும் அறிவுசார்ந்தும் உடலுழைப்பில் ஈடுபடும் துணைவி மற்றும் அன்னையரின் பணிகள் எப்பொழுதும் கருத்தில் கொள்ளப்படாது.

ஆறாவதாக, இந்த வரைவின்படி மனைவியானவள் எப்பொழுதும் தன் கணவனை விட அதிகமாக சம்பாதித்துவிட முடியாது அல்லது அவள் ஒரு பெரு நிறுவனத்தில் வேலை செய்வதாக சொல்லிக்கொள்ள இயலாது. அனைத்தையும் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது நாம் இல்லத்தரசிகளை அடக்கி ஒரு வரையறுக்கப்பட்ட ஒப்பீட்டின் கீழ் நிலையிலேயே வைத்துக் கொண்டிருக்கிறோம்.அவள் எப்பொழுதுமே தன் கணவனுக்கு அடிமையாகவே, குறைந்த ஊதியம் பெறுபவளாக, ஒரு நல்ல மனைவியாக, தாயாக வார்த்தைகளில் வடிக்க இயலாத நற்செயல்கள் செய்பவர்கள் எதனையும் பெறாதவர்களாவே இருக்கிறார்கள்.

ஏழாவதாக பெண்கள் தங்கள் பொருளாதாரச் சுதந்திரத்திற்கு அவளது கணவனைச் சார்ந்திருப்பது குறைக்கப்படவேண்டுமேயன்றி அதிகப்படுத்தக் கூடாது.

ஆக, பெண்ணியவாதிகள் இல்லத்தரசிகளுக்காக ஊதியம் கோரிக் கொண்டிருந்ததெல்லாம் தவறானதா? நாம் இன்னும் கொஞ்சம் தெளிவாக பார்க்கலாம். சமூகத்திற்கும், குடும்பத்திற்கும் செய்யும் பங்களிப்புக்கு அங்கீகாரம் வேண்டும், உழைப்புக்குப் பணமதிப்பு வேண்டும் எனும் தீவிர தேவையிலிருந்து பெண்ணியவதிகளின்  அறைகூவல் கிளம்பியது. கவனிப்பது, கணக்கில் கொள்வது, மதிப்பளிப்பது எனும் தேவைகளை அது முன்னிறுத்துகிறது. பெண்கள் செய்யும் வேலைக்கு எல்லையே இல்லை, ஆனாலும் அது அங்கீகரிக்கப்படுவதில்லை. இந்த கூவலானது உரிமை, சட்டபேறு பற்றியது, பணம் பற்றியது மட்டுமல்ல. மறைக்கப்படுவது, உரிமை நிராகரிப்பு மற்றும் சமூக நிராகரிப்பு பற்றிய பிரச்சனை இது. பணம் என்பது ஒரு எல்லைவரை மதிப்பைக் கொடுக்கிறது. உங்களை, உங்கள் குடும்பத்தை பாதிக்கும் விசயங்கள் குறித்து முடிவெடுக்கும் சுதந்திரத்தை அது வழங்குகிறது அவ்வளவுதான்.

மணமான பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு அவள் சம உரிமை கொண்டவளாக இருப்பதை, தன் கணவனின் சொத்துக்கள், முதலீடுகள் போன்றவற்றை கையாளும் உரிமை கொண்டவளாய் இருப்பதை உறுதி செய்ய வேண்டியதிருக்கிறது. மனைவியின் வருமானத்தின் மீது கணவனுக்கும் அத்தகைய உரிமை உண்டு.  திருமணம் என்பது சமமான பங்கீடைப் பற்றியது, ஒருவர் முன் அலுவலகத்தைக் கவனித்தால் மற்றொருவர் பின்னால் இருக்கும் வேலைகளைக் கவனிக்கிறார்.

அரசாங்கம் பெண்களின் நிலையை உயர்த்துவதற்குப் பொதுவான சிலவற்றின் மூலம் உதவலாம். சம உரிமகளுக்கான விழிப்புணர்வை உண்டாக்குவதன் மூலமும், ஆண் பெண் செய்யும் வேலைகளுக்கு எவ்வித பாகுபாடுமில்லாமல் சம ஊதியத்தை உறுதி செய்வதன் மூலமும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துவதன் மூலமும் உதவலாம். பெண்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட சட்டங்கள் செவ்வனே பயன்படுத்தப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.

உதாரணத்திற்கு, குடும்ப வன்முறை சம்பந்தமான கிட்டத்தட்ட 15000 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் ஏன் ஒன்றிற்குக் கூட இன்னும் தீர்ப்பு வராமல் நிலுவையில் உள்ளது?

நிதி மேம்பாட்டிற்கு உதவும் வகையில் தம்பதியினரின் கூட்டுக் கணக்கிற்கு, இல்லத்தரசிகளின் முதலீட்டிற்கு அரசு வரிசலுகைகள் தரலாம். திருமணமானவர்கள் அது ஆணோ அல்லது பெண்ணோ, அவர்களது ஊதியம் இருவரும் சேர்ந்து துவங்கிய கூட்டுக் கணக்கில் சேர்க்குமாறு பரிந்துரைக்க முடியும். சம உரிமைகள் மற்றும் சம அணுகுமுறையை மேம்படுத்துதலில் மட்டுமே அரசின் கவனம் இருக்க வேண்டும்.

ஆனால் மிக முக்கியமாக, இன்றியமையாத, ஊதியமில்லாத வேலைகளுக்கு (சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் மனைவி அல்லது தாய் ஆக்கப்பூர்வமாகவும் இணையான பங்கு வகிப்பதைப் போன்ற) அரசு வெகுமதி அளிக்க முன்வந்ததற்கு நாம் புத்துயிர் அளிக்க முடியும். இது பாராட்டுதல், மரியாதை, மேன்மை, சுயமரியாதை, கௌரவம், குடும்பத்தில் முடிவெடுக்கும் உரிமை போன்றவற்றை உள்ளடக்கியது. சுருங்கக் கூறின், நாம் பெண்களின் சேவைகளுக்கு பண நிர்ணயம் செய்வதை ஒதுக்கிவைத்துவிட்டு நல்வாழ்விற்கு மதிப்பு தருபவற்றைக் கற்றுக் கொள்ளலாம்.

மொழிபெயர்ப்பில் உதவி - கொற்றவை



Sunday, April 1, 2012

படிப்பும் விடுதலைக்கான அறிவும் - மருதையன்


படிப்பும் விடுதலைக்கான அறிவும் - மருதையன்

 ம.க.இ.க. பொதுச் செயலாளர் தோழர் மருதையன் பேசிய உரையினை நூலாக்கியுள்ளனர் கீழைக்காற்று பதிப்பகத்தார்...

எனது நன்றிகள் கீழைக்காற்று பதிப்பகத்தாருக்கும் மற்றும் பதிப்பகத் தோழர்களுக்கும்...புத்தகக் கண்காட்சியில் இந்த நூலையும் இன்னும் சில நூல்களையும் பரிந்துரைத்தமைக்கு...

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நாட்களில் பெரும்பாலான நேரங்களை மாத வார இதழ்களைப் படிப்பதிலேயே செலவிட்டுக் கொண்டிருப்பேன்.. கைகளில் பாடப்புத்தகங்களை விட அந்த இதழ்களே அதிக நேரம் அமர்ந்திருக்கும்..கல்லூரி நாட்களில் இலக்கியவட்டத்தைச் சேர்ந்த நண்பர்கள் எவரும் வாய்க்கவில்லை...நான் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என்பதுதான் சரியாக இருக்கும். இன்றும் கூட அதிகம் இல்லை.. ஆனால் ஆர்வம் காரணமாகவும் கிடைத்த நல்ல நட்புக்களின் உதவியினாலும் கிடைக்கும் நேரத்தில் இப்பொழுது சற்று அதிகம் வாசித்தும் கொண்டிருக்கிறேன்.. கருத்துமுதல்வாதம்,பொருள்முதல்வாதம் என்று ஆரம்பப்படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.

 இந்த நேரத்தில் கைகளில் கிடைத்தது இந்நூல்.. எப்படி படிக்க வேண்டும் என்பதை விட எதற்காக படிக்கிறோம் என்பது வாசித்தலின் ஆர்வத்தை மேம்படச் செய்வதுடன் வாசித்தலுக்கான சிறந்த இலக்கின் அவசியத்தை உணர்த்துகிறது...நம்மையுமறியாமல் முதலாளித்துவத்தின் ஆளுகைக்குட்பட்டு பிள்ளைகளைக் கசக்கி பிழிந்து அவர்களைச் சோர்வாக்குவதுடன் அவர்களது ஆளுமைத் திறனையும் குறைத்து விடுகிறோம்.அவர்களின் மீது கொண்டுள்ள அக்கறை என்று பெற்றோர்கள் கூறுவது எவ்வகையில் சேர்ப்பது... சமூகம் முதலாளித்துவத்திற்கு ஆட்பட்டு சீர்குலையும் நிலையில் தனது பிள்ளைகளையும் ’அவர்களுக்கேற்றார் போல்’ தயார்செய்து (முதலாளி தன் நிறுவனத்திற்காக இயந்திரங்களைத் தயாரிப்பதும் வாங்குவதையும் போல்) அவர்களுக்கு அர்ப்பணிப்பது எப்படி அக்கறையாகும்.. சமூகமும் ஊடகமும் எவ்வாறு ஒருவனை சோர்வாக்குகிறது என்று மட்டுமில்லாமல் அவனது ஆற்றலை எவ்வாறு அழிக்கிறது என்பதையும் அழகாக பேசியிருக்கிறார்.

புத்தகத்தின் உள்ளே உள்ள தலைப்புகளில் சில..

காரியவாத படிப்பும், காலியாகும் ஆளுமையும்!
உண்மையான மகிழ்ச்சியை பாப்கார்ன் தலைமுறை அறியாது!
முதலாளித்துவம் உருவாக்கும் சிந்தனையற்ற விலங்குகளாய் நாம்!
படிப்பு உழைப்பாக மாறும்போது சமூகம் அடிமைத்தளையிலிருந்தும் விடுபடும்!

ஒரு நோக்கமில்லாமல் படிப்பதை விமர்சனம் செய்யும் தோழரின் வார்த்தைகள்....

அந்த காலத்தில் கண்டதை வாங்கிப் படித்துக்கொண்டிருப்பேன்.ஒரு சமயம் ஒரு தோழருடன் ஒரு நூல் பற்றி விவாதிக்க வேண்டியிருந்தது.அதைப் படிக்காமல் ஏதோ Sunday அல்லது India Today வைத்துப் படித்துக் கொண்டிருந்தேன்.அப்போது அவர் நான் இன்ப நாட்டத்திற்காகவே படிப்பதாகக் கூறினார்.அப்போது எனக்கு புரியவில்லை.. நாம் சீரியசாகத்தானே படிக்கிறோம்.இதிலென்ன pleasure என்று நினைத்தேன்.உங்கள் தனிப்பட்ட இன்பத்திற்காக நீங்கள் படிக்கிறீர்கள் என்று அவர் சொன்னார்.அது உண்மை. அது ஒரு இலக்கற்ற படிப்பு.அப்படிப் படிப்பதிலேயே ரசனை கொண்ட ஒரு இலக்கியவாத கூட்டம் இருக்கிறது.

 என்று தொடர்கிறது தோழரின் வார்த்தைகள்..

 கற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் முதலில் சில நூல்களையோ அல்லது கட்டுரைகளையோ படிக்கும்போது சிலது புரியாமல் நம்மைச் சோர்வடையச் செய்யும்.அதைப் போன்ற அனுபவம் எனக்கும் நேர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கேற்றார்போல் நமது அறிவை ஆற்றலை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெளிவாய் முன்னிறுத்துகிறது இவரது வார்த்தைகள்.அதை விடுத்து எழுத்தாளரை அவர் புரியாதபடிக்கு எழுதுகிறார்;இன்னும் இலகுவாக எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வகையில் நியாயம்.

மார்க்ஸ் நூலையோ, லெனின் நூலையோ, அப்படி ஆய்வுப்பூர்வமாக அறிவியல் பூர்வமாக எழுதுகின்ற நூல்கள் அல்லது ஆழ்ந்து உணர்ந்து எழுதப்படக்கூடிய இலக்கியங்கள், கவிதைகள் இவையெல்லாம் SUN TV, TIMES NOW மாதிரி பார்க்க முடியாது. படிக்க வேண்டும்.இன்னொரு முறை படிக்க வேண்டும்.பிறகு அதில் தங்கி நின்று சிந்திக்க வேண்டும். புரியவில்லை என்றால் கேட்க வேண்டும்.படித்தவர்களோடு விவாதிக்க வேண்டும்.புரியாத இடத்தைக் குறித்து வைத்துக் கொண்டு சிந்திக்க வேண்டும்’ என்கிறார்.இப்பொழுது படிப்பதில் ஒன்றும் எனக்கு பிரச்சினை இல்லை.நேரம் கிடைக்குபொழுதெல்லாம் படித்துவிட முடியும்.. சிந்திக்கவும் அதனைப் பற்றி புரியாதபட்சத்தில் விவாதிக்கவும் நண்பர்கள் இன்னும் அதிகம் தேவையாயிருக்கிறது. தேடுதலும் மிக அவசியம்தானே!

 படிப்பதும் ஒருவகையில் உழைப்பே என்கிறார் தோழர். நம் ஆர்வத்திற்காக மட்டுமின்றி வாசித்தலில் ஒரு நோக்கமும் இலக்கும் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகவே உணர்த்துகிறது இவரது வார்த்தைகள்..

மேலும் மக்கள் கருத்தியல் ரீதியான ஒரு ஆளுமைக்குக் கட்டுப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இந்த சமூகம்தான் நியாயமானது,இந்த சமூகம்தான் சாத்தியமானது என்று மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அநீதிக்கு உட்படுத்தப்படும் மக்கள் கூட இந்த அநீதி தவிர்க்கப்படமுடியாதது என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அப்படி கருத்துரீதியாக அடங்கியிருப்பதால்தான் அடங்கி இருக்கிறார்கள்.அதற்குப் பிறகு அடங்காமல் போனால்தான் துப்பாக்கிமுனை என்கிறார்.

கருத்துரீதியான ஆளுகைக்கு முதலாளிகளுக்கு கைகொடுப்பது மதமும் அதைத் தொடர்ந்த கடவுள் நம்பிக்கையும்.. இது சம்பந்தமான ஒரு வெற்று பிம்பத்தை மக்களிடம் பரவலாக்கி அதனை மீறி யோசிக்க விடாமல் தங்கள் ஆளுகைக்குள்ளாகவே வைத்திருப்பதில் இவற்றின் பங்கும் கணிசமாக இருக்கிறது.

 கம்யூனிசம், பெரியார்-அம்பேத்கரியக் கொள்கைகளால் பார்ப்பனியம் மற்றும் முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடத் தேவையான ஆற்றலை இலக்குடன் கூடிய படிப்பின் துணைகொண்டே அடையமுடியும் என்கிறார் தோழர் மருதையன்.

ஒவ்வொருவருக்கும் போராட வேண்டும் என்று அவசியம் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் தங்களின் சமூகத்தைப் பற்றியும் அது எதைநோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது என்பது பற்றியும் ஒரு பரந்த பார்வை அவசியம்.அதனை இலக்குடன் கூடிய படிப்பு மற்றும் விவாதத்தின் துணையுடன் நிச்சயம் அடையலாம் என்பதை தெளிவாக விளக்கும் முப்பது பக்க நூல்.

Tuesday, January 24, 2012

விவசாயக் கிழவன் சாகக் கிடக்கிறான்..


இன்று ஒரு விவசாயக் கிழவன் சாகக் கிடந்தான்
என் கிராமத்தில்

தகப்பனின் தாய்மாமன்...
தாத்தன் அவனெனக்கு...
சாவு சட்டென வந்து விட வேண்டும்...
கொடுமையடா சாமி..

எட்டு வயதில்
என் தாத்தனின் சாவை அருகில் இருந்து பார்த்தேன்..

இழுத்துக் கொண்டிருந்தது..
சுற்றியும் உறவினர்கள்....
பாலூற்றிக் கொண்டிருந்தார்கள்...

என் தகப்பன் ஒருபுறம் மயங்கி விழுந்தான்..
எட்டு வயதில் எனக்கென்ன தெரியும்...
என்ன செய்கிறார்கள் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம்
வாண்டுகள் நாங்கள்...
பெரியப்பனின் சின்ன மகன் சொன்னான்...
வெங்குடு..
என் அண்ணன் அழுவான் இப்பொழுது..
சேர்ந்தழுவோம் என்று..
அந்த அண்ணனுக்கு ஒன்பது வயது..
சிரித்துக் கொண்டேன்..

பிறகு என்னையும் பாலூற்றச் சொன்னார்கள் பேரனென்று..
வெள்ளைத் துணியில் பாலை நனைத்து
ஊற்றிய பாலில்
கொஞ்சம் தொண்டையில் இறங்க
அதிகம் ஒழுகியது கடைவாயில்..
பிறகு நடந்தது ஞாபகம் இல்லை...
அவன் உயிர் போய்விட்டது...

அவனும் விவசாயக் கிழவந்தான்..
உழைத்த எவனுக்குமே உடல் கூடாய்த்தானிருக்கிறது..

இந்தக் கிழவனும் அப்படித்தானிருந்தான்..

இக்கிழவன் எனக்குக் கொஞ்சம் பிரியமானவன்..
இப்பொழுதுதான் அந்த நினைப்பே வந்தது
பிரியமானவனென்று

எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருப்பான்
அதனால்தான் பிரியமாய்ப் போய்விட்டான் போல்..

அவன் அதட்டலும் கூட
சிரிப்பாகவே வரும்..

இன்று கலங்க வைக்கிறான்..

பச்சை கிராமம் எங்களது முன்பு
இப்பொழுது இல்லை சொல்லுமளவு..

ஏனில்லை
இதோ..
இந்த கிழவன்களைக்
காவு கொடுத்து காவு கொடுத்து
அத்தோடு பச்சையையும் காவு கொடுத்து விட்டோம்.
இல்லை..
காவு கொடுத்து காவு கொடுத்து
காவு கொடுத்து விட்டேன்...

வத்தலையும் பருத்தியையும்
மூடை மூடையாக
கு(வி)ண்டால் கு(வி)ண்டாலாக
அளப்பவன் இவனும் காயாம்புவும்..

வத்தலின் வாடையிலும் இருமலையும் சகித்துக் கொண்டு
தடித்த நூல் கயிற்றின் தராசில்
ஒருபக்கம் படிக்கல்லும்
மறுபக்கம் ஈய வாளியில்...
வத்தலும்..

எண்ணுவான் ஒவ்வொரு வாளிக்கும்...
இல்லை.. பாடுவான்...
ஒன்ன்ன்னு... ஒன்ன்ன்னு... ஒன்ன்ன்னு... ஒன்ன்ன்னு...

மூடையில் கொட்டிவிட்டு இரண்டாவது வாளியில்
ரெண்ண்ண்டு... ரெண்ண்ண்டு... ரெண்ண்ண்டு... ரெண்ண்ண்டு...

இப்படியே தொடரும்...
வாளி வாளியாய்...
ராகம்.. ராகமாய்..
இன்றோ..
ரணமாய்...

அந்த பாட்டுக்காகவே பக்கத்தில் நிற்பேன்..
போ.. ம்மையா.... போ.. ம்மையா...
இருமல் வரும் என்பான்...
கிழவன்...

இன்று இழுத்துக் கொண்டிருக்கிறான்...
சட்டென நிற்காதா மூச்சு...
அவன் செத்தபின் வந்திருக்க வேண்டும்
பாவி நான்...

எப்பொழுது போனாலும்
ஏ(ம்)வி ம்மையா... ஏ(ம்)வி ம்மையா...
என்பான் வாய் நிறைய.. அன்பொழுக..
அந்த வாயில் இன்று ஊற்றப்பட்ட
துளசிநீர் அதிகம் தொண்டைக்குள்ளும்
கொஞ்சம் கடைவாயிலும் ஒழுகியது..

மகள்கள் மூவரும் அழுது கொண்டிருந்தார்கள்
கட்டிய மனைவியும் தான்..

மூத்த மகளை பெத்த செல்லி
இடையவளை நடி செல்லி
இளையவளை சின்ன செல்லி என்பான்...

அவர்களுடனும் தோழமையே கொண்டவன்..
கிழவன்...

மகன்கள் இருவரும் துபாயில்
இன்றிரவு வந்து விடுவார்கள்..

மூத்த மகளும் மனைவியும்
அவன் புகழ் பாடி ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள்...

கிழவன் என்ன செத்தா போய்விட்டான்..
எழுந்து ஓரம் போங்கள்...
தொண்டை வரை வந்ததை அடக்கிக் கொண்டேன்...

அம்மா என்றான்.. அய்யா என்றான்...
இடையிடையே குழறிய நாக்கில்
நாக்கு சற்றே உள் வாங்கியிருந்தது...

மூச்சு மிகுந்த சிரமத்துடன்
வயிறு மேலும் கீழும்

இடையிடையே தன்னிச்சையாக
எழுந்தமர்ந்தான்..
தொப்பென சாய்ந்தவனை
தலை தாங்கிப் பிடித்தான் என் மாமனொருவன்...

எழுந்தமர்ந்த பொழுதெல்லாம்
மனைவி கேட்டாள் தலையைத் தடவி..
என்னையா... என்னையா வேணும்..
அதட்டலாய்...
குழறலாய்ச் சொன்னான்...
தோசுகா.. தோசுகா...

மூத்த மகள் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்தாள்..
தட்டிவிடவே முயன்றான்...

மகன் வழிப் பேத்தி காலில் ஏறமுயன்றாள்...
குனிந்து முழித்துப் பார்த்தவன்...

புரிந்து கொண்டான் போல் ஒன்றரை வயது குழந்தையை
வலக் கையை மட்டும் ஆட்டினான்
குழந்தையின் முகத்திற்கு நேரே..
வேண்டாம்... வேண்டாம் என்று...

குழந்தையை சட்டென அதன் தாய் வாரிக் கொண்டாள்...

பக்கத்தில் ஒப்பாரிக்குத் தயாராயிருந்த கிழவியொருத்தி சொன்னாள்
கிழவனுக்கு தாய் தந்தை முகம்
ஞாபகம் வருமாம்
அதனால் இந்த ஆர்ப்பாட்டமாம்...

அப்படியா கிழவா?
உன்னுள் நான் வர வேண்டும்
இல்லை நானும் சாக வேண்டும்
உன்னை அறிய...

இதோ...
எழுபதுகளில் துடிக்கும்
கிழவனைக் காண
தொண்ணூறுகளில் நடமாடும் ஒரு கிழவன் வருகிறான்
கம்பையூன்றிக் கொண்டே...

அய்யா.. பாருங்கையா - மனைவி

உட்காரக்கூட இல்லை,,
கம்பூன்றி நின்று கொண்டே..
உற்றுப் பார்த்தவன்
உதிர்த்தான் சிலவற்றை..
இன்னும் நேரமாகும்
இரு வார்த்தைகளில் உதிர்த்துவிட்டு
திரும்பாமல் நடந்து சென்றுவிட்டான்

காலையில் நான் வந்தவுடன் பார்த்தபொழுது
இவ்வளவு கூட்டம் இல்லை..

மூத்த மகளும் மனைவியும் மட்டும்
அழுது கொண்டிருந்தார்கள்..

தாத்தா.. தாத்தா.. என்றேன்
மெதுவாகவும் பின்
சத்தமாகவும்

கையைப் பிடித்தேன்
பின் கன்னத்தில் தடவி
தாத்தா.. தாத்தா.. என்றேன்..

சிரமப்பட்டு மூச்சு விட்ட கிழவனிடம்
பதிலேதும் இல்லை...

பக்கத்திலேயே அமர்ந்திருந்தேன்
ஒருக்களித்துப் படுத்திருந்தான்

சற்று நேரம்..

மடக்கியிருந்த இடதுகை சட்டென கீழே விழுந்தது
என்னை நோக்கி..
இரையைப் பிடிக்க பம்மி
சட்டென நகரும் பல்லியாய்
இன்னும் கொஞ்சம் நீண்டது..

நான் தொடவில்லை..
ஏன் எனத் தெரியவில்லை,,,

மலவாயில் வைக்கப்பட்ட சீலையை
மனைவி சரி செய்தாள்..
சிறுநீர் கழிக்க தொப்புளுக்குக்கீழ்
துளையிடப்பட்டு சொருகப்பட்டிருந்த மஞ்சள்குழாய்
தெரியாதவாறு போர்வையைச் சரி செய்தாள்...

கிழவனின் கை சுவற்றில் உரசி உரசி புண்ணாகியிருந்தது...

இரு பத்தாண்டுகளுக்கு முன்

கிழவனின் பச்சை வயலில்...
கிழவன் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான்..

கிணறுகள் எதுவுமே சுற்றுச் சுவர் இல்லாமல்
மொட்டையாகத்தானிருக்கும்
ஒட்டிச் செல்லும் வாய்க்காலில்
நடக்கவே நடுநடுங்கும் எனக்கு...

ஓரமிருக்கும் பப்பாளி மரத்தில்
பழம் தேடிப் பறித்துத் தருவான்
மறக்காமல் சொல்வான்
தம்பிக்கும் குடுய்யா என்று..

அந்த கைகள்தான் இது...

போடா கிழவா..
எழுந்து வந்து விட்டேன்....

மதியத்திற்குப் பின்

பார்த்தபோது
சுவாசம் சற்று சீராகியிருந்தது...
கொஞ்ச நேரம் பார்த்து விட்டு வெளியே வந்தேன்..

ஊர் மடத்தில் அமர்ந்திருந்தேன்..
ஊர்க்காரர்களின் நல விசாரிப்புகள்

சித்தப்பன் ஒருவன் வந்தான்
பேசிக் கொண்டிருந்து விட்டு
சட்டென ஞாபகம் வந்தவனாய்க் கேட்டான்
சாப்பிட்டாயாடா என்று...
காலையில் சாப்பிட்டேன்..
இன்னும் நேரமாகவில்லை
பிறகு சாப்பிடணும்

வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றிக் கொண்டான்
வீட்டுத் திண்ணையில் இன்னொரு கிழவன்
சித்தப்பனின் அப்பன்...
இவனும் விவசாயக் கிழவன்
உழைப்பவன்.. உடல் கூடில்லை!

இவன் உடல் கூடாகியிருக்காது
மாறாய் இரும்பாய் இறுகியிருக்கும்..
நரம்புகள் ஆங்காங்கே புடைத்திருக்கும்
முழங்காலின் கீழ் பின்பகுதியில்
நரம்பு முடுச்சு ஒன்று
பாம்பு போல் சுருள் சுருளாயிருக்கும்

இன்னொரு திண்ணையில் வெள்ளாடு ஒன்று...
அசை போட்டுக் கொண்டிருந்தது...
மெதுவாகச் சென்று
பிடரியில் கைவைத்து அழுத்தி
நகராமல் பிடித்துக் கொண்டேன்
அது திமிரி எழுந்ததும் இன்னும் அழுத்தி
நான் திண்ணையில் அமர்ந்து கொண்டேன்
குதூகலம் எனக்கு..

அதன் வாயை என் வாயருகே கொண்டு வந்து
அதன் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்
அப்பொழுதும் அசையை நிறுத்தவில்லை
திமிர் பிடித்த ஆடே
பயமில்லை உனக்கு..

ஐயோ..
பயமெதற்கு அதற்கு..
என்னை ஆடு புரிந்து கொண்டது..
நான் தான் மறந்து விட்டேன்
அதன் மொழியை..
ஆமாம்..
நானும் ஆடுகளும் பேசிக் கொள்வோம்
இளம்பிராயத்தில்

என் பிடியின் அழுத்தத்தால் சற்று இருமியது
அசை போட்டுக் கொண்டே..
பிடிதளர்த்தி கொஞ்சம் தட்டி விட்டேன்...

என் சேட்டைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிழவன்
மெதுவாய் ஆரம்பித்தான்...
கிழவன் மறைத்து வைத்திருந்த கத்தி
என் கண்ணில் படவில்லை..

எப்படா வந்த
காலையில் ரத்தினாவுக்கு தாத்தா

இப்ப எங்கடா இருக்க
ஒரிசால தாத்தா

எவ்ளோடா குடுக்குறாங்க
முப்பது ரூவா தாத்தா

இடையே உள்ளிருந்து சித்தப்பன்
டேய் மகனே வாடா சாப்பிடலாம்

இப்ப வேணாம் சித்தப்பா

கிழவன் தொடர்ந்தான்
வெளில போகலையாடா
பாத்துக்கிட்டுருக்கேன் தாத்தா
இன்னும் அமையல..
போய்ட்டுதான் வீடு கட்டணும்...

எங்க டவுண்லயாடா...
இதைக் கேட்டவன் முகத்தில் எந்த சலனுமில்லாமல் கேட்டான்
அதனால்தான் அவன் கத்தியைக்
கூர்தீட்டியதும் எனக்குத் தெரியவில்லை

ஆமாம் தாத்தா..

காடுகரையெல்லாம் பொட்டலா விட்டுட்டு போய்ட்டீங்களேடா

சிறு மௌனம்-பின்
ஆமாம் தாத்தா..
ஊரே வெறிச்சோடி இருக்கு தாத்தா

கிழவனின் கத்தி இப்பொழுது பளபளப்பாகத் தெரிந்தது
ஆனால் எந்த அவகாசமுமில்லாமல்...

போதும்டா முப்பது ரூவா...
இங்க இருடா...
ஊர்ல இளவட்ட பயலுகளே இல்லடா...’

சர்வ சாதாரணமாக
முழு வீச்சில்
கிழவனிடம் சலனமில்லாமல்
வெகு ஆழமாய் இறங்கியது கத்தி...

சொன்னவன் பதிலை எதிர்பாராமல்
வீட்டிற்குள் நடந்தான்..

கண்களில் கண்ணீர் குளம்...
பிடி சற்று இளகியதையறிந்த வெள்ளாடு
என் மடியில் முன்னங்காலை ஓங்கி அழுத்தி
திண்ணையிலிருந்து பாய்ந்து குதித்தது
ஐந்தடி தாண்டி...

புழுக்கை போட்டு விட்டு திரும்பி
நான் கண்களைத் துடைப்பதைப் பார்த்துக் கொண்டது

மெதுவாக படியேறி அந்த கிழவனின் பின்னாலேயே
வீட்டிற்குள் சென்றது

சித்தப்பன் மறுபடியும்
டேய் வாடா சாப்பிடலாம்..

நான் அந்த ஆட்டின் பின்னாலேயே சென்றேன்

வலப்புறம் இரண்டு ஆட்டுக் குட்டிகள்
இரை தின்று கொண்டிருந்தது
சித்தப்பன் ஆட்டுக் குட்டிகளை விரட்டி விட்டான்

சம்சாரி வீடுடா... என்றான்
சிரித்துக் கொண்டே..

நானும் சம்சாரிதான்
நினைத்துக் கொண்டேன்
சொல்ல வெட்கம்...

மொச்சைக்காய் குழம்பும் ரசமும்
ஒரு சட்டியில் நிறைய சாதமும்
தட்டில் பரிமாறிக் கொண்டே
எல்லாத்தையும் முடிக்கணும்டா என்றான்...

பாட்டிக்கு...

தூக்கு சட்டில கொண்டு போயிருச்சுடா..

விவசாயத்தைப் பேசிக் கொண்டே சாப்பிட்டோம்
உப்பு சற்று அதிகம்..
கிராமத்துச் சுவை வெகுநாள் கழித்து...

சாப்பிட்டு வீட்டின் முன்
ரோட்டிற்கு வந்தோம்..

இதோ
இந்த கருவேல மரங்களும்
பொட்டல் நிலமும்
கொஞ்சம் புதரும்
மண்டிக் கிடக்கிறதே...

இருபதாண்டுகளுக்கு முன்
இந்த பச்சை நிலத்தில்
நான் கிணற்று நீரில் குளித்தேன்...

குளித்த அன்றே செத்திருக்க வேண்டும்...

மறுபடியும் கிழவனைப் போய் பார்த்தேன்.
துளசி நீரின் உதவியோ என்னவோ
சுவாசம் இன்னும் கொஞ்சம் சீராகவே இருந்தது

ஈராண்டுகளுக்கு முன் செத்துப்போன
என் தாத்தன் வீட்டினுள் வந்தமர்ந்தேன்
பாட்டியினருகில்...

திண்ணையில்
என் இன்னொரு தாத்தனும் பெரியப்பனும்
தலையெல்லாமல் வெளுத்தவன்,,
செத்த என் தாத்தனுக்கு தம்பியவன்
என்பதைக் கடக்கப் போகிறவன்
உரையாடினான் உரவிலைபற்றி..

பொட்டாஷ் உரமெல்லாம் விலையேறிப் போச்சு
இனி விவசாயம் செய்ய முடியாது
இவன் வாயிலிருந்தா இந்த வார்த்தை..
அடேய்
போதுமடா கத்தி சுத்தியது
தாங்க மாட்டேன் நான்..

ஆண்டவா
என் இரு கால்களை
உன்னொரு கையால்
இறுகப் பிடித்துத் தூக்கிச் சுழற்றி
ஒரே அடியில் என் தலை தரை மோத
வெடித்துச் சிதற விடு...

இவ்வளவைக் கேட்ட பின்னும்
என் பாழாய்ப் போன படிப்பினை
தூக்கி எறிய மனம் வரவில்லையே..
வடிகட்டிய முட்டாளும்
சுயநலவாதியும் நான்...

இந்த கிழவன் காலையில் சொல்லியிருந்தான்
சாகக் கிடக்கும் கிழவனின் வாயிலில் அமர்ந்து கொண்டு
என் மாமன் முறையான ஒருவனிடம்
இந்த வீட்டை 1957ல் கட்டினானாம் 2700 ரூபாய்க்கு
இப்பொழுது கட்டினால் இருபது லட்சத்திற்குக் குறையாது
இந்த குக்கிராமத்தில்

உடனே மாமன் கேட்டான்
அப்போ மரம் விட்டமெல்லாம் இத்துப் போயிருக்குமே...
சளைக்காமல் சொன்னான் கிழவன்
நாகூரிலோ நாகர்கோவிலிலோ
அணாவிற்கு வாங்கினதுடா அப்போது
இன்னும் நூறு வருசத்திற்கு இருக்கும்
பெருமையுடன் சொன்னான்

அந்த கிழவன் தான் சொல்கிறான்
இனி விவசாயம் செய்ய முடியாது

ஜெர்மனிய அடிமை
நான் சொல்கிறேன்
இருடா கிழவா..
உன்னையும் காவு கொடுக்கிறேன் விரைவில்

இரவு எட்டு மணி...

கொண்டு வந்த புத்தகப்பையை
சுமந்து கொண்டு ரோட்டில் நடந்தேன்
பேருந்து நிறுத்தத்திற்கு.

இருட்டில் எங்கிருந்தோ ஓடிவந்த நாய்...
ஊளையிட்டு குரைத்துக் கொண்டே
என்னை நோக்கி ஓடி வந்தது

என்னுள் பெருங்கோபம்
நடையில் அதே வேகம்..
நாயே ஓடி விடு..
என்னை பார்த்தா குரைக்கிறாய்..
நான் பிறந்த ஊர் இது...
இருபத்தாறு ஆண்டுகளாக என்னைச் சுமக்கும் ஊர் இது
நேற்று பிறந்த நாய் நீ.
என்னைப் பார்த்தா குரைக்கிறாய்,,,

அதனோடு இன்னொரு நாயும் சேர்ந்து கொண்டது...
அதன்பின் நான் எதுவும் குரைக்கவில்லை

அதுகள் இப்படித்தான் குரைத்திருக்க வேண்டும்...
ஏ.. ஜெர்மானிய அடிமையே
இருபத்தாறு ஆண்டுகளாய்ச் சுமக்கும் ஊரை
என்ன மயிருக்குடா விட்டுப் போகிறாய்
நீ பிறந்த ஊரில்தான் நானும் பிறந்தேன்
அதனால்தான்
நான் உரிமையுடன் குரைக்கிறேன்...
நன்றியுள்ள நாய்களே
இன்னும் சத்தமாய்க் குரையுங்கள்..
வருகிறேன் நான்..

........................

என் ஊர்
பொட்டல் காடாயின்
என் பிணத்தை அங்கு
எரிக்க வேண்டாம்
எரியாது அது
அப்படியே விட்டு விடுங்கள்
அநாதைப் பிணமாய்...
நரிகளும் நாய்களும்
இழுத்துப் போகட்டும்
காக்கையும் பருந்தும்
கொத்தித் திண்ணட்டும்

என் ஊர்
என்னால் பசுமையாயின்-நான்
எங்கிருந்தாலும்
எங்கிறந்தாலும்
தயைகூடி என்னை எடுத்து வாருங்கள்
என் தோட்டம் போகும் வழியில்
வலப்புறம் இருக்கும் சுடுகாட்டில்
கொஞ்ச நேரம் காற்றில் அமர்த்தி
பின் எரியூட்டுங்கள்..

நரம்புகள் முறுக்கி
நான் எழுந்தால்...
வெட்டியானே, என் நண்பனே
தயைகூர்ந்து என்னை அடித்துப் படுக்க வைக்காதே
சற்று நேரம் குளிர்க்காற்றை
கடைசியாய்
ஆசையாய்
வாங்கி விட்டு
நானாய் அடங்கி விடுவேன்....


Tuesday, January 11, 2011

பூ வாசம் என் வசம்!

நடந்து கொண்டிருந்த என்னை ரோட்டோரமாக வெகுவாகப் பூத்திருந்த, மலர்ந்திருந்த நீல நிற அந்த பெயர் தெரியா மலர் வெகுவாகக் கவர்ந்தது... செடியாக இல்லாமல் கொடியாகவே மண்ணில் முழுதும் பரவியிருந்தது.. இருபுறமும் ஆங்காங்கு தேங்கியிருந்த சிறு குட்டை என்றும் சொல்ல முடியாத நீர் தேக்கம் என்றும் சொல்ல முடியாத நீர்நிலைகளில் இலைகளை முழுவதும் இழந்து வெறும் மரக்கூடுகளாக இருந்த அந்த இறந்து போன மரங்களோ அதிவேகத்தில் பரதமாடிய பெண்கள் அப்படியே ஆடிய நிலையிலேயே சிலையாகி விட்டனரோ என்று எண்ணுமளவிற்கு கிளைகளைக் காற்றில் நிறுத்தி விட்டு அமைதியாகியிருந்தன...
ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அவ்விடத்தில் தேங்கிய நீரின் நாற்றம் மிக மெல்லியதாக காற்றில் விரவியிருந்தது.... மனது மட்டும் பரவியிருந்த நீலப் பூக்களையே சுற்றி சுற்றி வந்தது... சிறு வயதில் தோட்டத்தில் நீர் ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்காலின் பக்கமாக ஈர நிலத்தில் அதிகமாக பூத்துக் குலுங்கும் நீல நிற டிசம்பர் பூவை அது நினைவுபடுத்தியது. என் சித்தி ஒருத்தி அந்த பூக்ளைக் கட்டி அடிக்கடி தலையில் சூடிக் கொள்வாள்... ஏனோ அவள் கூந்தலில் ஏறியதும் அதற்கு வேறொரு பரிணாமம் கொண்டு தன்னை இன்னும் அழகு படுத்திக் கொள்ளும் அந்த பூ...

இப்பொழுது மல்லிகையைத் தவிர மற்ற பூக்களை அரிதாகத்தான் பார்க்க முடிகிறது..பெண்கள் பூக்களை மறந்து விட்டார்களா இல்லை பூக்கள் அவள் கூந்தலேறி தன்னை அலங்கரித்துக் கொள்ள மறந்து விட்டதா?தெரியவில்லை.. 

எனக்கு ஏனோ அந்த பூவைப் பறித்து அதன் வாசத்தை நுகர்ந்து விட வேண்டும் எனத் தோன்றியது... நல்ல இடமாகப் பார்த்து நன்கு விரிந்திருந்த ஒரு மலரைப் பறித்துக் கொண்டேன். மிக அருகில் பார்த்ததும் டிசம்பர் பூவிற்கும் இதற்கும் மிக அதிக வித்தியாசம் தெளிவாகப்பட்டது. டிசம்பர் பூ இதை விட சற்று அடர் நீல நிறத்தில் இடை விட இன்னும் மென்மையாக இதை விட சற்று சிறிதாகவே இருக்கும்.. இன்னும் எளிதாக எனில்... அலங்காரம் துளியும் இல்லாத இயற்கையிடம் அதிக அழகை இரவல் பெற்ற பெண்ணின் அழகு டிசம்பர் பூ... சற்று அலங்காரத்துடன் உதட்டுச்சாயம் இத்யாதிகளைப் பூசிக்கொண்டு மினுக்கும் அழகு...என் கையிலிருக்கும் பூ...
வாசம்...ஐயோ... டிசம்பர் பூவின் வாசத்தை மீட்டெடுக்க என் நியூரான்களில் எதுவும் எனக்கு உதவ மறுத்துவிட்டது.... பூவேனும் ஞாபகமிருக்கிறதே.. என் குழந்தை பூவென்றால் என்னவென்று இனி கேட்டாலும் ஆச்சர்யப்பட முடியாது போலவே... 

இதன் வாசத்தை முகர்ந்து விடும் முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது..சற்று வேகமாக நடந்ததால் மூச்சின் வேகம் அதிகமாகவே வேகத்தைக் குறைத்து பூவின் வாசத்தை நுகருமளவு என் நடையைக் குறைத்துக் கொண்டேன்... இப்பொழுது மிக மெதுவாக பூவின் இதழ்கள் என் இரு உதடுகளையும் கவ்விக் கொள்ள அதன் மகரந்தங்கள் என் நாசிக்கு வெகு அருகில்... என்ன கொடுமை இது... இன்னும் எட்டவில்லை எனக்கு அதன் வாசம்... மாறாக காற்றில் பரவியிருந்த தேங்கிய நீரின் நாற்றம் மெதுவாக மூக்கைத் துளைத்தது...

அலுவலகமும் நெருங்கிவிடவே எப்படியேனும் அதன் வாசத்தை நுகர்ந்து விடத் துடித்தது நாசியும் மனமும்.. துணிந்தது மூளை... யுக யுகங்களுக்கு முன்பே இயற்கையிலிருந்து பிறழ்ந்து இயற்கைக்கு முற்றிலும் எதிராகி இதன் உச்சத்தை நோக்கி தாவிக் கொண்டிருக்கும் என் மனித மனம் அதைச் செய்தே விட்டது... வாடிக் கொண்டிருந்த அதன் இதழின் ஒரு சிறு பகுதியை என் விரலால் கசக்கி விரலோடு இதழையும் சேர்த்து முகர்ந்தேன்.. இதுதானடா என் பிணவாடை என்று முனகிக் கொண்டே தனதழகை முற்றிலும் இழந்து விட்டிருந்தது.. என்ன செய்வதென்று தெரியாமல் அதனை இடது கையில் ஏந்தி பார்த்துக் கொண்டிருந்தேன் சிறிது நேரம்.. பிறகு மெதுவாக அதனைத் தூக்கி எறிந்தேன். செத்த எலி போல் சொத்தென்று ஒலி எழுப்பி நான் முற்றிலும் இறந்து விட்டேன் என எனக்கு உணர்த்தியது... வன்புணர்ந்தவனுக்கும் எனக்கும் அதிக வித்தியாசம் இல்லை....!

Saturday, November 6, 2010

என் முதல் ஸ்கூட்டர் பயணம்... !

என்னடா இவன்,எதோ ராக்கெட்டில் செவ்வாய் கிரகம் போய் வந்தது போல் அங்கலாய்க்கிறானே..என்று எண்ணினாலும் சரி.. வேலை வெட்டி இல்லையோ என நினைத்தாலும் சரி. செவ்வாய்க்குப் போய் வந்திருந்தாலும் கூட  இந்த எண்ண ஓட்டங்கள் ஏற்பட்டிருக்காது. 

இதற்கு முன்னிருந்த நிறுவனங்களில் அலுவலகத்திற்கு சக தோழர்களுடன் மகிழ்ச்சியாக அலுவலக ஊர்தியிலயே பயணப்பட்ட எனக்கு,சில காரணங்களால் அந்த வேலையை விட்டுவிட்டு, ஐந்து மாதங்களாக வேலை கிடைக்காமல் வேறுவழியின்றி இங்கு சேர்ந்த பின்  இந்த சிறு நிறுவனத்தில் ஒரு பழைய பஜாஜ் ஸ்கூட்டரை பணிக்காகக் கொடுத்திருந்தது சற்றே அயர்ச்சியையும் எரிச்சலையும் தந்திருந்தது.

இதற்குமுன் தமிழ்நாட்டில் ஸ்கூட்டர் ஓட்டிய சிலரை வெகு அரிதாகக் காணும்போது மனதிற்குள்ளாகவே கேலியாக சிரித்துக் கொள்வேன். அதெல்லாம் வயாதனவர்களுக்கான வாகனம் என்பதாக என் மனதில் ஓர் எண்ணம் படிந்திருந்தது. ஆனால் அது இப்பொழுது எனக்கு!! அது என் வீட்டு வாசலில் வந்து நிறுத்தப் பட்டபோது எதோ எருமை மாட்டை என் வீட்டில் வந்து கட்டி விட்டதாயும் அதன் மேல் அமர்ந்து பணிபுரிய செல்லும்படியும் விதிக்கப்பட்டதைப் போல் உணர்ந்தேன். 
மறுநாள் மனதே இல்லாமல் அதனை எடுத்து ஸ்டார்ட் செய்ய எத்தனித்தபோது அதனுடைய அகலம் அதைக் கையாள சிரமம் ஏற்படுத்தியது. சாவி துவாரத்தைத் தேடி அதன் கழுத்துப் பகுதியில் சொருகி விடுவித்தபோது இரவு முழுதும் கட்டி வைத்திருந்த எருமைமாட்டை அதன் கழுத்தை இப்படியும் அப்படியும் திருப்பி சற்றே விடுதலை கொடுத்துவிட்டதாய்ப் பட்டது.. அதன் மேல் ஏறி அமர்ந்ததும் அதுவரையில் எருமைமாடாய் என் மனதில் பதிந்துவிட்டிருந்த அந்த ஒன்று.... சற்றே பெருத்த கன்றுக்குட்டியின்மேல் அமர்ந்துவிட்டதாய்த் தோன்றியது. அடுத்து ஸ்டார்ட் செய்ய வேண்டுமே.. திரும்பி கீழே பார்த்தபோது கிக்கர் மிகவும் கீழே இருப்பதாய்ப் பட்டது. பைக்கில் ஏறி அமர்ந்ததும் உடனேயே கிக்கரை ஒரே மிதியில் ஸ்டார்ட் செய்யும் வசதி இதில் இல்லை.பைக்கில் எலெக்ட்ரிக் ஸ்டார்ட் இருந்தும் கிக்கரை உபயோகப்பதில் திருப்தி அடைந்தவன் நான். ஆக பைக்கில் இருக்கும் சுறுசுறுப்பு இதில் இல்லாதது, இது முதியோர்களுக்கான வாகனமே என்ற என் எண்ணத்தை மேலும் வலுப்படுத்தியது. என்ன செய்ய! கன்றின் மேல் அமர்ந்தவாறே கிக்கரை மிதித்தேன்.. ம்ம்ஹும்.. ஒன்று..இரண்டு..மூன்று...வாயைத் திறக்க மறுத்தது அது. அப்பொழுதாவது இறங்கி அதற்குரிய மரியாதையுடன் கையாண்டிருக்க வேண்டும்.. செய்யவில்லையே.. விளைவு... நான்காவது மிதி..ஓங்கி மிதித்ததில் சற்றே உள்வாங்கி நீட்டிக் கொண்டிருந்த ஒன்று வலது கணுக்காலின் சற்று மேலே எலும்பைப் பதம்பார்த்தது. காலுறையைக் கூட அவ்வளவாக சேதப் படுத்தாமல் மிக அழகாக தோலைக் கிழித்து விட்டிருந்தது அது. என்னுடைய ஷூவும் கூட என்னைக் காக்க மறுத்துவிட்டது எனக்கு வருத்தம்தான். இருந்தும் அதற்கு சேதம் இல்லாததால் சற்று நிம்மதி...(அதைப் பெரிதுபடுத்தாமல் மாலை வந்தே காலுறையைக் கழட்டிய போது காயத்துடன் ஒட்டிக்கொண்டு  எரிச்சலைத் தந்தது). முதன்முதலில் சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்து கால் கட்டை விரலில் ரத்தம் கொட்டிய நிகழ்வை ஏதோ ஒரு நினைவலைவரிசையில் சேமித்து வைத்திருந்த எனது மூளை அதைப் புத்துணர்வு செய்து கொண்டது.

இறங்கி கன்றுக்குட்டியை அதன் சிறிய கொம்புகளை வெகு லாவகமாக பிடித்துக் கொண்டே இருந்த இடத்தில் நிறுத்தி அதன் கழுத்து அசையா வண்ணம் அதைச் சிறைப்படுத்தி அதன் ஒரு கொம்பைப் பிடித்து ஆட்டி உறுதிப் படித்திக் கொண்டேன். அன்று பிளான்ட் செல்லும் முன் ஆய்வகம் செல்ல வேண்டியிருந்ததால் அலுவலகத்திற்குச் சென்று அங்கிருந்து வண்டி எடுத்துக் கொள்வதாய்த் திட்டம். ஆட்டோவைக் கேட்டால் என்பது ரூபாய் என்றான். பக்கம்தானே என்று பேருந்து இருக்கிறதா செல்வதற்கு என்று அவனிடம் கேட்டேன்.. அந்த பேருந்தில் ஏறிக் கொள்ளுங்கள் என்று அவன் கை காட்டிய இடத்தில் பேருந்து நின்று கொண்டிருந்ததில் மிகுந்த ஆச்சர்யம் எனக்கு... பின்னே..நமது ஊரைப் போல்  பேருந்துகள் அதிகம் புழக்கத்தில் இல்லாமலிருக்கும் இங்கு(சட்டீஸ்கர்) உடனேயே பேருந்து கிடைத்துவிட்ட மகிழ்ச்சி.. ஓடிப் போய் ஏறி அமர்ந்து கொண்டேன்..அலுவலகத்தை அடைந்து வண்டிக்குக் காத்திருந்த போது கொஞ்சம் ஸ்கூட்டர்களையும்(அதை ஓட்டியவர்களும் வயதானவர்களாகவே இருந்தனர்).. ஆய்வகத்திற்குச் செல்லும்போது அதைவிட அதிகமான எருமைமாடுகளும் என் வழியை மறித்துக் கொண்டு சாலையைக் கடந்து சென்றன நிஜமாகவே..

மாலை அறை நண்பன் வந்ததும் அவன் தன் பங்கிற்கு ஒருபக்கம் சாய்த்து இன்னபிற சம்பிரதாயங்களைச் செய்து மிதித்த ஒரே மிதியில் உர்ர்ர் என உறுமியது... எனக்கு கோபம்.. நான் சொல்லிக் கேட்கவில்லையே என்று. சிறிதுநேரம் அலறவைத்த அவன் அணைத்துவிட்டு திரும்ப மிதிக்க, ம்ம்ஹூம்.. அசையவில்லையே.(சிறிதே நிம்மதி எனக்கு, அவன் சொல்லியும் கேட்கவில்லை என்பதால்).சிறிது நேரம் முயன்ற அவன் களைப்படைந்தவனாய் காலையில் பார்த்துக் கொள்ளலாம் என வந்துவிட்டான். இடையில் இன்னொருவன் சிறுவயதில் தன்னுடைய தந்தை,அம்மா மற்றும் தங்கையுடன் ஸ்கூட்டரில் பயணம் செய்ததாகவும் அது மகிழ்ச்சியான அனுபவம் என்றும் சிலாகிக்க அதற்கு இன்னொருவன், அப்படியானால் அண்ணனிடம் இந்த ஸ்கூட்டரை வாங்கி உன் ஸ்ருதியை ஏற்றிக் கொண்டு ஒரு ரவுண்டு அடித்து விட்டு வா என்றதும் ஏற்பட்ட சிரிப்பில் நானும் கலந்து கொண்டேன்.

இப்படியாக முதல்நாள் முடிந்துவிட்ட நிலையில் மறுநாள் நண்பன் சென்றதும் திரும்பவும் அவஸ்தையாய்(என்ன செய்ய,அதைப் பார்த்தவுடன் உற்சாகம் போய் விடுகிறது எனக்கு) விடுவித்து நேற்றுபோல் ஏறி அமர்ந்ததும் காலைக் கிழித்தது ஞாபகம் வந்தது. இடதுபுறமாய் ஏறிய நான் வலதுபுறமாய் இறங்கி(சிறுவயதில் பச்சைக் குதிரை விளையாடிய ஞாபகம் வந்தது) மிகுந்த பக்தியுடன் மிதித்தேன்.வலதுபுறமாய் நின்று இடதுகாலால் மிதிக்க சற்று கடினமாகாத்தான் இருந்தது. எங்கே கீழே விழுந்திடுமோ என்ற பயம் வேறு. இன்றும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அலுவலகத்தில் தெரிவிக்க ஒரு மணி நேரம் கழித்து இருவர் வந்தனர். இருவருமே சற்றே வயதில் மூத்த அலுவலக வாகன ஓட்டுனர்கள்.. எனக்கு சங்கடமாகி விட்டது இவர்களை அனுப்பியிருக்கிறார்களே என்று. ஒருவர் என் நண்பன் நேற்று செய்ததைப் போலவே சாய்த்து சம்பிரதாயம் செய்து மிதித்த ஒரு மிதியில் வாயைத் திறந்து கொண்டது. வெகு நாட்கள் பழக்கம் போலும் இருவருக்கும். முதல் பிரச்சினை பெட்ரோலைத் திறந்து விடவில்லை என்றதும் எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. நான் என்ன சொல்லுவது எனத் தெரியாமல் நான் நேற்றிலிருந்து முயற்சிக்கிறேன்.. ஸ்டார்ட் ஆகவில்லை என்று திணறினேன்...எனக்கு சற்று வெட்கமாக இருந்தாலும் நேற்று என் நண்பனும் இச்சம்பிரதாயங்களைச் செய்தும் அவனது பேச்சையும் கேட்க மறுத்ததை எண்ணி சற்று ஆறுதலடைந்தேன். ஓட்டி பார்த்து விட்டு தருகிறேன் என்றதும் வாசலை எட்டி கம்பிக்கதவைத் திறந்து ஏற்கனவே எப்படியோ உள்ளே புகுந்த பசுவை வெளியே விரட்டி அவருக்கு வழி அமைப்பதில் முனைந்தேன். என்னைக் கண்டதும் மிரண்டு ஓடிய பசு, ஸ்கூட்டர் அருகில் வந்ததும் ஏனோ திரும்பி அதன் முகப்பை அப்படியே முகர்ந்து பார்த்துக் கொண்டு நின்று விட்டது. எனக்கு ஆச்சர்யமும் சந்தோசமும்..என்னைப் போலவே பசுவும் அதைக் கன்றுக்குட்டி என நினைத்து விட்டதோ என்று.விரட்டுவதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் அப்படியே நின்று விட்டேன். ஓட்டுனர் விரட்டி சற்றே பின் வாங்கிய பசுவை அதன் கால்களில் இடித்து மேலும் துரிதப்படுத்தினார். மனதிற்குள் திட்டிக் கொண்டேன். 

ஓட்டி விட்டு தந்தவர் நான் ஏறி அமர்ந்ததும் அமைதியானது.என்னைப் பிடிக்கவில்லை போலும். சரி நீங்கள் ஓட்டிப் பார்த்து விட்டு சொல்லுங்கள்,ஏதும் பிரச்சினை எனில் வண்டியைக் கொடுத்து விட்டு அவருடன் செல்லுங்கள், வண்டி ரயில்வே க்ராசிங்கின் மறுமுனையில் உள்ளது என்றவரிடம் விடை பெற்று அவரது சிற்றுந்தை நோக்கி செலுத்தினேன். சிறிது தூரத்தில் சிக்னலை அடைந்து வேகத்தைக் குறைத்ததும் அமைதியானது மறுபடியும்.இறங்கி திரும்பவும் மிதித்து கிளப்பி ரயில்வே கிராசிங் வரும்போது கதவைப் பூட்டியிருந்தார்கள் ரயில் கடந்து கொண்டிருந்ததால். நிறுத்துவதற்கு வேகத்தைக் குறைத்த எனது எண்ணத்தைப் புரிந்து கொண்ட விதமாக அதுவாகவே அமைதியானது. ஏற்கனவே இந்த வேலைப் பிடிக்காமல் இருந்த எனக்கு இந்த சம்பவங்கள் அனைத்தும் எரிச்சலூட்டி சீக்கிரம் வேலையை விட்டு சென்று விட வேண்டும் என நினைக்கத் தூண்டியது. ரயில வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க பின்னால் இருவரும் வந்து என்ன சார் வண்டி எப்படி இருக்கு என்றனர். வேகம் குறைந்தவுடன் அதுவாகவே நின்று விடுகிறது. நீங்கள் சரி செய்து கொண்டு வாருங்கள் என்று கூறிவிட்டேன்.அவரும் சரியென்று கார்ப்பரேட்டரை சுத்தம் செய்தால் சரியாகிவிடும் என்றபடி எடுத்து சென்றதும் நான் இன்னொருவருடன் பிளாண்டிற்குள் வந்து விட்டேன். 

மாலை 3 மணியளவில் அழைத்தவர் சார் வண்டி சரியாகி விட்டது. வீட்டில் விட்டு விடவா என்றதும் சரி என்று வைத்து விட்டேன், இவ்வளவு சீக்கிரம் எப்படி முடிந்தது என்று எண்ணியவாறே.

மாலை வந்து அதைக் கண்டு கொள்ளவே இல்லை. எனக்கு பிடித்திருந்தால் எடுத்து ஓட்டிப் பார்த்திருப்பேன். மனதிற்குப் பிடிக்காத ஒன்றைக் கண்டுகொள்ளாதது இயல்புதானே.அதுவும் என்னைப் பிடிக்காதது போல் அந்த பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டது. மறுநாள் காலை என் நண்பன் சென்று விட்ட பிறகு பச்சைக் குதிரை தாண்டி சம்பிரதாயம் முடித்து இரண்டாவது மிதியில் எடுத்து விட்டேன். திணறியபடியே ஓட்டி சிக்னலை அடைந்ததும் பழையபடியே அதுவாக அமைதியானது. பொய் சொல்லி நேற்று என்னிடம் கொடுத்து விட்டான் என நினைக்கிறேன். அதைப் பற்றி அலுவலகத்திலும் புகாரோ ஏதும் நான் தெரியப் படுத்திக் கொள்ளவும் இல்லை. என் விதியைத்தான் நொந்து கொண்டேன். இல்லையென்றால் அந்த வேலையை விட்டுவிட்டு வருவேனா! விவேக்கின் பாணியில் எப்படி இருந்த நான் இப்படி ஆகி விட்டேன் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே சிக்னல் விழுந்து பின்னால் இருந்த குதிரைகளும் இன்னபிற வாகனங்களும் என் கன்றுக் குட்டியை அகற்றும்படியாக கதறின.நானும் அவசரமாக இறங்கி ஸ்டார்ட் செய்து ரயில்வே கிராசிங் கடந்து வேகத்தடையில் அணைந்துவிடக் கூடாதே என்று மிக கவனமாய் சென்று கொண்டிருக்க, சைக்கிளில் முன்னாள் அமர்ந்திருந்த ஐந்து ஆறு வயது மதிக்கத்தக்க சிறுவன்  என்னைப் பார்ப்பதாக எண்ணி சிரிக்க எத்தனித்தபோது அவனது பார்வை என் ஸ்கூட்டரின் மேல் நிலைபெற்றுருப்பதை உணர்ந்தேன். என் புன்னகை அதுவாகவே அணைந்து விட்டது.அவன் அப்படியே என்னை நோக்கி திருப்பிய பார்வை ஏதோ வெளியில் போய்த் திரும்பிய தந்தை தனக்கு என்ன வாங்கி வந்திருக்கிறாரோ  என்று ஆவலாய்ப் பார்ப்பதாய் உணர்ந்தேன். அப்படியெல்லாம் பார்க்கக் கூடாது என்று வடிவேலு பாணியை மனதில் நினைத்தக் கொண்டேன். 

சிறிது வேகத்தைக் கூட்டியதும் வண்டியில் ஏற்பட்ட உதறல், என் வீட்டில் இருக்கும் நிஜமான காளைக் கன்றை இழுத்துக் கட்டுவதை விடவும் கடினமாக இருந்ததால் வேகத்தைக் குறைத்துக் கொண்டேன். ஒருவழியாக நான் பிளாண்டிற்குள் நுழைவதற்கு முன் வழியில் கிட்டத்தட்ட பத்து முறைகளாவது நின்றுவிட்டிருந்தது. சோர்ந்து போய் இறங்கி கையைப் பார்த்தபோது இடது கையில் வண்டியில் ஊற்றப்பட்ட எண்ணெய் ஒட்டிக் கொண்டிருந்தது. எதைப் பற்றியும் யாரிடமும் கூறாமல் இந்த மாதத்துடன் வேலையை விட்டுவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்... அன்றோடு வேலைக்குச் சேர்ந்து பத்து நாள் முடிவடைந்திருந்த நிலையில்...

மரங்கள் என்னை மதிப்பதில்லை....

                              

                      அன்று மதிய உணவிற்கு சற்று முன் அவசர வேலை காரணமாக தொழில் நிமித்தம் கதிரியக்கத் துறை நண்பர் ஒருவரைச் சந்தித்து விட்டு நண்பனின் மோட்டார் சைக்கிளில் நாங்கள் பணிபுரியும் இடத்திற்குத் திரும்ப வந்து கொண்டிருந்தோம் மரங்களின் ஊடாகக் குளுமையுடன்... நான் பின்னால் அமர்ந்திருந்ததால் அண்ணாந்தும் பக்கவாட்டில் திரும்பியும் வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்தேன்.... ஆந்தை தன் தலையை எனக்குக் கொடுத்திருக்குமாயின் 360 டிகிரியிலும் சுழட்டிக் கொண்டிருப்பேன்..அமையவில்லை... வழியில் வண்டி பஞ்சர்... சரி பார்க்க அவன் ப்ளாண்டின் வெளியே செல்ல ஏழெட்டு கிலோ மீட்டரும் எனது பணியிடம் செல்ல ஒன்றரைக் கிலோமீட்டரும் பயணம் செய்ய வேண்டும்... அவன் சென்று விட நான் இன்னொருவனுக்கு அலைபேசியில் அழைத்த போது அங்கு சாப்பிடுவதற்கான ஆயத்தங்கள் தெரிந்தன. அவனை அழைக்காமல் நடப்பதென முடிவெடுத்தேன் மரங்களின் குளுமையுடனும் ஆலையின் தூசுக்களினூடேயும்..அங்கு பணிக்குச் சேர்ந்து இருவார காலமான நிலையில் பணிதான் பிடிக்கவில்லையே தவிர திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள் அடர்ந்திருந்தது ஒருவித குதூகலத்தை எனக்குள் உருவாக்கி இருந்தது. ஏனெனில் இதற்கு முன் பணிபுரிந்த இரு நிறுவனங்களிலுமே பணியிடம் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில்... அலுவலகத்தை விட்டு வெளியே வந்தாலே சுட்டெரிக்கும் வெயில்..குஜாராத்திலாவது பராவாயில்லை.. அரபு நாட்டில் பணிபுரியும்போது தனது தாகத்தைத் தீர்க்க எங்களது உயிரை உறிஞ்சும் வெயில்.. ஒரு மரத்தையோ செடியையோ கண்ணில் பார்க்க முடியாது..இதனாலேயே பல நேரம் அலுவல் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதுண்டு..போதாதற்கு மதிய வேலையில் எப்பொழுதாவது  வெயிலுடன் கூடிய காற்றில் சிக்கினால்..... இரண்டு நாட்களுக்கு நமது பாடு திண்டாட்டம்தான்.. தமிழ் அன்பர்களுக்கு இதைப் பற்றி விளக்கத் தேவையில்லை. பெரும்பாலான தமிழர்கள் தங்களின் குடும்ப தாகத்தைத் தீர்க்க அங்குதானே உயிரைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. 

இப்படியிருந்த எனக்கு இங்கு இவ்வளவு அதுவும் அடர்ந்த மரங்களைக் கண்டதும் போகும்போது வரும்போதும் முதலில் சந்தோசமாகத்தான் இருந்தது. ஆனால் மற்ற இடத்தை விட மிதமிஞ்சிய வகையில் காற்றில் தூசுக்கள்... வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தேன்... பசித்ததால் வழியில் உணவகம் இருக்கிறதா என பார்த்தும் கேட்டும் கொண்டே.. மிகப் பெரிய ஆலை என்பதால் பல இடங்களில் உணவகங்கள் இருந்தன.. அது ஒரு ஆலை என்பதே என் மனதில் இருந்து மறைந்ததற்காக பல காரணங்களை அடுக்கலாம்.. வழியில் ஒரு பெட்டிக்கடையில்!!! கேட்ட பொழுது நேராக சென்று வலப்பக்கம் என்றார். அந்தக் கடையின் முன் பெரியவர் ஒருவர் கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார்... ஒரு மர நிழலில் படுத்திருந்தார் என சொன்னால் அது அந்த வனாந்திரத்தில்?! இருக்கும் ஒட்டுமொத்த மரங்களையும் அவமதிப்பதாகும்.. ஏனெனில் அங்கு என்னை வெளியில் வரமுடியாமல் சுட்டெரித்த ஆதவன் இங்கு என் காலடி தொடுவதற்கு மன்றாடிக் கொண்டிருந்தான் மரங்களிடம். இவ்வளவு மரங்கள் இருந்தும் என்னைப் பாதித்த விடயம் அவற்றில் ஒன்று கூட என்னிடம் பேசவில்லை என்பதுதான்.. பேச்சு.. வேண்டாம்.. ஒரு புன்னகை...இல்லையே... சரி என்னிடம் வேண்டாம்... அவைகளுக்குள்ளாகவும் கூட அவை பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. அந்த அளவிற்கு அவற்றின் மீது தூசி படிந்து அவற்றை பொலிவில்லாமல் ஆக்கியிருந்தன.. ஓடி விளையாடும் குறும்புக் குழந்தை எதிர்பார்த்த ஒன்று கிடைக்காததால் முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டது போலிருந்தது அவைகளைக் காணும்போது..

சற்றுதூரம் நடந்ததும் வலப்பக்கம் ஒற்றையடிப்பாதை ஒன்று பிரிந்தது. நான் இந்த காட்டிற்குள் என்ன இது ஒற்றையடிப் பாதை என்று எட்டிப் பார்த்துவிட்டு இறங்காமல் இடப்பக்கம் எழும்பியிருந்த கட்டடத்தில் ஒரு நொடி பார்வையை நிறுத்தி ஆளரவமற்ற அந்த இடத்தில் நேராக நடந்து கொண்டிருந்தேன்.. திடீரென்று கூவென்று நீண்டது ரயிலின் சத்தம் எனக்குப் பின்னால்.. ஒன்றும் புரியாமல் முழித்துக் கொண்டிருக்கும்போதே சில நொடிகள் கழிந்து என் வலப்பக்கம் எனக்கு இணையாக அந்த மரங்களின் இலைகளின் தழுவல்களுக்கு ஊடே ரயில் சென்றது மெதுவாக... ரயில் தளவாடத்தில் பயணம் செய்யாமல் மரங்களின் மடிகளில் ஊர்ந்து செல்வதாகவே பட்டது எனக்கு. குழந்தையை வேண்டுமென்றே முறைத்து அது வாய் கோணி அழ முற்படும் வேலையில் பேஏஏ.... என்று சிரித்து அதன் மெல்லிய இதழில் பூக்கும் புன்னகைப் பூவை ரசிப்பது போல், மரமும் அந்த ரயிலை தன் கிளைகளுக்குள் ஒளித்து வைத்து திடீரென என் கண்முன் காட்டி என்னை மிரளவைத்து அது சிரித்துக் கொள்ள விழைகிறது என எண்ணியவாறே அதை ஏறெடுத்துப் பார்த்தபோது எனக்குதான் ஏமாற்றம். அது எப்பவும் போல் மூஞ்சைத் தொங்கப்போட்டுக் கொண்டுதான் இருந்தது, நான் அதை முறைத்து விட்டு திரும்ப பின்னோக்கி வந்து அந்த ஒற்றையடிப் பாதையில் இறங்கினேன்.. சில மீட்டர்கள் சென்று ரயில் தடவாளம் கடந்தபோதுதான் தெரிந்தது அந்த பக்கம் இருக்கும் கட்டிடங்கள்.

அதற்குள் வயிறும் உணவு வேண்டும் என பசித்துணர்த்தவே சற்று வேக நடையில் உணவகம் சென்றேன்.. அங்கிருக்கும் எல்லா உணவகங்களுமே ஒரு சிறிய கல்யாண மண்டபம் போல் பெருத்திருந்தாலும் பராமரிப்பு அவ்வளவாக இன்றி அரசாங்கக் கட்டிடம் என்ற முத்திரையை பதித்துக் கொண்டிருந்தது.படியேறி வாசலைத் தொட்ட போது என்னை வரவேற்காமல் பாதி உடலை வெளியிலும் தலையை உள் பக்கம் நீட்டியவாறு கண்களை ஒரு இடத்தில் பதித்திருந்தது ஒரு பசு.. தினமும் வரும் விருந்தினர் போல.. யாரும் அதைக் கண்டு கொள்ளவில்லை.. அதுவும் யாரையும் கண்டுகொள்ளவில்லை..அதனைத் தொந்தரவு செய்யாமல் உள்ளே சென்று விட்டு அதன் கண்கள் எங்கு நிலைத்திருக்கிறது என்று பார்த்த பொழுது என்னால் சரிவரக் கணிக்கமுடியவில்லை.எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், எதாவது கொடுத்தால் கொடுங்கள்.. இல்லையென்றால் நடையைக் கட்டுகிறேன் என்று யாரையும் கோபிக்காமல் மிகவும் சாந்தமாக இருந்தது அதன் பார்வை.. உள்ளே சென்று சாப்பாடு இருக்கிறதா என்றேன். இல்லை சமோசாதான் இருக்கிறது என்றான்.மணி ஒன்றுதானே ஆகிறது.அதற்குள் தீர்ந்து விட்டதா என்று எண்ணியவாறே அவனிடம் எதுவும் கேட்கவும் விரும்பாமல் என் வீட்டில் சாப்பிடுவதை நினைத்துக் கொண்டேன்.மதிய வேளையில் அம்மா ஊற்றும் சாம்பாரையும் அதனுடன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொண்டு சாப்பிடுவதும்... இங்கு எனக்கு சமோசா இருக்கிறது என்கிறான். அதெல்லாம் எம்மாத்திரமடா.. வாசலை அடைந்தபோது அந்த பசு அந்த இடத்தை விட்டு அசையாமல் கண்கள் கூட அதே நிலையில் சிலையோ என்று எண்ணும் விதம் அப்படியே நின்று கொண்டிருந்தது. எனக்கு பாவமாக இருந்தது.உனக்கு இங்கு சாப்பிட ஒன்றும் கிடைக்காதுடா என்று நினைத்தவாறே அதன் முதுகில் என் விரல்களால் தடவியபோது.... என் மென்மையான விரல்கள் அந்த முரட்டுத் தோலில் பட்டபோது அது சிலிர்த்துக் கொண்டதா இல்லை.. எனைத் தொந்தரவு செய்யாதே என்று தோலை சிலுப்பிக் கொண்டதா தெரியவில்லை..அப்பொழுதும் கூட அது என்னைக் கண்களை மட்டும் கூட திருப்பி பார்க்கவில்லை.இறங்கி வெளியில் வந்தேன். இவ்வளவு மரங்கள் இருந்தும் இடையில் செடிகள்
மண்டி இருந்தும் அங்கெல்லாம் பசியாற்றிக் கொள்ளாமல் இங்கு வந்து சமோசாவிற்காக நிற்கிறதென்றால்... அடப்பாவமே... எதுவுமே அது சாப்பிடும்படி இல்லையா! அந்த அளவிற்கா மோசமாயிருக்கிறது... நான் அந்த ஆலைக்குள் வேறு சில குறிப்பிட்ட இடங்களைக் கடக்கும்போது தூசுகள் கலந்த ஒரு நெடி(மோசமான நாற்றம் எதுவும் இல்லை) எனக்கு குமட்டிக் கொண்டு வந்தது. எனக்கும் ஐந்து அறிவையோ இல்லை அந்த பசுவிற்கு ஆறாம் அறிவையோ கொடுத்திருந்தால் நானும் அதுவும் தோள் மேல் கை போட்டுக் கொண்டு விவாதித்துக் கொண்டிருந்திருப்போம்..
கொடிய விலங்குகள் என்கிறோம்.. உண்மையிலேயே மிகக் கொடிய விலங்கு மனிதன் தான். காட்டு விலங்குகளுக்கு தற்பாதுகாப்புக்குக் கூறிய நகங்களையும் கொம்பு போன்றவைகளையும் படைத்தவன் மனிதனுக்கு ஆறாவது அறிவு என்ற மிக மிகக் கொடிய ஆயுதத்தைப் படைத்து விட்டான்.அது இருப்பதால்தானே சிந்தித்து சீர்தூக்கிப் பார்த்து வேட்டையாடிக் கொண்டிருக்கிறான். காட்டு மிருகங்களும் கூட "அறிவில்லாததால்" அதன் பசிக்கும் தற்பாதுகாப்புக்கும் மட்டுமே மற்றவற்றைத் தொந்தரவு செய்யும். மனிதன் உள்ளே நுழையும்போது அவற்றில் பலவற்றை வேட்டையாடியிருப்பான். சில முடிந்தமட்டும் எதிர்த்து பின் ஓடி ஒவ்வொன்றாக செத்து விழுந்திருக்கும்.நாம் அறிவும் சிந்திக்கும் தன்மையும் கொண்ட மனிதர்களாயிற்றே.அது நமக்கு தேவையில்லை.

நான் அந்த ஆலையில் இரு வாரங்களுக்கு முன் முதன் முதன் முதலாக நுழையும்போது மரங்களைக் கண்டு வியந்த வியப்பு... ஆகா இவ்வளவு அழகாகப் பராமரிக்கிறார்களே என்ற பெருமிதம் வெகு சில நாட்களிலேயே ஒழிந்து போனது. நான் நினைத்ததற்கு மாறாக, இங்கு ஒரு ம....ரத்தையும் நடவில்லை.. இருப்பதைப் பிடுங்கி ஊடே தார்ச்சாலைகளையும் ரயில் தளவாடங்களையும் பெரிய கட்டிடங்களையும் எழுப்பி மிகப்பெரிய ஆலையை உருவாக்கியிருந்தார்கள் என்ற உண்மை என் மர மண்டையில் ஏற சில நாட்கள் ஆயின. யோசித்துக் கொண்டே நடக்கையில் பசி ஒருவித களைப்பை உருவாக்கியிருந்தது.தலையில் இருந்த தலைக் கவசமும் கண் கண்ணாடியும், காலின் ஷூக்களும் இன் செய்த சட்டையும் அவஸ்தையாகவே தெரிந்தன. ஏனோ ஊரில் நண்பர்களுடன் வேப்ப மரங்களின் நிழலில் கைலியையும் சட்டையையும் கட்டிக் கொண்டு கிரிக்கெட் விளையாடியது நினைவிற்கு வந்தது. எல்லவற்றையும் கழட்டி எறிந்து ஒரு லுங்கியையும் சட்டையையும் போட்டுக் கொண்டு அங்கு பூராவும் சுற்ற வேண்டும் போல் தோன்றியது.அவஸ்தை மேலும் அதிகரிக்க அப்பொழுது கழட்ட முடிந்த தலைக் கவசத்தையும் கண்ணாடியையும் மட்டும் கழட்டிக் கொண்டேன். கண்ணாடியைக் கழட்டியதும் தூரத்தில் அழுக்காய் இருந்த மரங்கள் இன்னும் மங்கலாய்த் தெரியவே மீண்டும் அதை போட்டுக் கொண்டேன்.
உள்ளே சிறிய பூங்காக்களை அமைத்திருந்தார்கள்..சில இடங்களில் செயற்கையாகவும் சில இடங்களில் இயற்கையாகவும்.. சில இடங்களில் இயற்கையாகவே வளர்ந்த மரங்களைச் சுற்றி வேலியிட்டு அதனைப் பூங்காவாக்கியிருந்தார்கள். அதுனூடே இருந்த வெவ்வேறு உயரங்களில் இருந்த புற்களும் சிறிய புதர்களும் அவை இயற்கை என்பதைக் காட்டியது.என் கைகளாலேயே அந்த வேலிகளை பிய்த்து எறிந்து ஓடிவிடுங்கள் ஓடிவிடுங்கள் என்று அந்த மரங்களைப் பார்த்துக் கத்த வேண்டும் போலிருந்தது. செயற்கையாய் அமைத்த பூங்காக்களில் ஒழுங்காய் வெட்டப்பட்டிருந்த புற்களையும் குள்ளமாய் உருண்டையாய் இருந்த செடிகளையும் கண்டபோது குழந்தைகளை அலங்கரித்து ஏதொவொரு அணிவகுப்பிற்கு தயார்படுத்தப்பட்டதைப் போலிருந்தன. என்னை விட சற்று உயர்ந்து வளர்ந்திருந்த சில மரங்கள் வரிசையாய் நின்றது, இளங்குமரிகள் நடன ஒத்திகை முடித்து பார்வையாளர்கள் முன் சற்றே பதற்றத்துடன் நடனத்தைத் துவக்கும் விதமாய் நின்றுகொண்டிருப்பதைப் போலிருந்தது. அவற்றில் மஞ்சள் பூக்களைத் தலையில் சூடி அவற்றை வழி நடத்திக் கொண்டிருந்த முதிர் கன்னிகளும் அடக்கம்.

இப்படியாகப் போகும்போதும் வரும்போதும் என்னுடன் பேசாமலேயே நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் மரங்களை பார்த்துக் கொண்டே செல்வேன்.. வேதிப் பொருட்களையும் வாயுக்களையும் சுமந்து செல்லும் குழாய்களுக்கிடையிலும் சில இடங்களில் மரத்தின் கிளைகளும் கொடிகளும் புகுந்து அவைகளுடன் உறவாடிக்கொண்டிருந்தன. அந்த இரும்புக் குழாய்களும் கூட தங்களையும் இந்த மரத்தின் கிளைகளாய் பாவித்துக் கொண்டு உயிரோட்டத்துடன் காணப்பட்டது... அவற்றிற்கெல்லாம் உயிர் கொடுத்த அந்த மரங்கள் எந்த உணர்ச்சியும் சலசலப்புமின்றி சத்தியாகிரகத்தைத் தொடர்ந்து கொண்டிருந்தன.

இப்படியான ஒரு நாளில் சற்று முன்கூட்டியே சென்று விட்டதால் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்..காலை வேலையில் மரங்கள் பக்கத்தில் இயற்கையாகவே இருந்த குளுமையைத் தாண்டி அங்கு திரவ நிலையில் சேமித்து வைக்கப் பட்டிருந்த ஆக்சிஜன் டாங்குகள் அந்த இடத்தைக் கடக்கும்போது இன்னும் குளுமையைக் கூட்டின.

அவ்வளவு மரங்கள் இருந்தும் நான் இதுவரையிலும் ஒரு பறவையையோ அதன் குரலையோ கேட்காதது மிகப் பெரிய ஏமாற்றம். அறிவற்றவை என்று நம்மால் அறியப்பட்டவைகள் கூட நினைத்த மாத்திரத்தில் முடிவெடுக்கும் தன்மையைக் கொண்டிருக்கின்றன.தமக்கு ஒவ்வாது என்றதும் உடனடியாய் வேறு இடத்திற்குக் காலி செய்து கொள்கின்றன.

ஒரே ஒரு நாள் சில தட்டான்களை மட்டும் கண்டிருந்தேன். மெதுவாக நடந்தவாறே முடிவாக இருந்த பெரிய சுவரின் பக்கம் நடந்தேன்.அங்கு இருந்த சற்றே உயர்ந்த மரங்கள் மட்டும் சலசலத்து தங்களுக்குள் சம்பாஷனையில் ஈடுப்பட்டிருந்ததைப் பார்க்கும்போது எனக்கு சற்றே ஆச்சர்யம் இவை தனிக் கட்சியோ என்று. ஆனால் அவையும் கூட என்னைப் பார்த்ததே ஒழிய எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நான் தனியாக உலாவுவதைப் பார்த்து விட்டு உடன் பணிபுரியும் நண்பனும் சேர்ந்து கொண்டான்.அவன் அவ்வூரைச் சேர்ந்தவன். அந்த பக்கம் என்ன இருக்கிறது எனக் கேட்டதற்கு ஒன்றும் இல்லை.. இன்னும் ஆலையை விரிவாக்கப் போகிறார்கள் என்றான்.அந்த பக்கம் பார்ப்பது என்ற முடிவில் அங்கு புதிதாகக் கட்டப்பட்டுக் கொண்டிருந்த நீரைக் குளிர்விக்கும் நிலையத்தின் (Cooling Tower) ஐந்து அடுக்குக் கட்டிடத்தில் ஏறினோம். முதலில் அதன் உச்சியில் கான்க்ரீட்டால் மறைத்து வடிவமைக்கப் பட்டிருந்த ஐந்து மீட்டருக்கும் அதிகமான ஆரம் கொண்ட, நீரின் வெப்பத்தை இழுத்து மேலே அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்த காற்றாடியின் இறக்கைக்குள் மெதுவாக தலையை நுழைத்து அதனைத் தடவிப்பார்த்தேன்.என்னவெல்லாமோ தோன்றியது.திடீரென்று அது சுழல ஆரம்பித்தால் அதன் இறக்கையைப் பற்றிக் கொண்டு நானும் சுழல்வதைப் போலும் இல்லை எனது உடல் இரண்டாகி நீரின் ஆவியோடு ஆவியாய் எனது ஆவியையும் மேலே பறக்க விடுவதுமாய்த் தோன்றியது. வெளியே வந்து பக்கவாட்டில் அடுத்த கட்டிடத்தில் ஏறி ஆலையின் பின்புறம் பார்த்தபோது மலைத்துத்தான் போனேன்.இடதுபுறம் மிகப் பெரிய ஏரி, நீல நிறத்தில் தண்ணீரை தன் முழுதும் நிரப்பிக் கொண்டு ரம்மியமாக இருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரையில் நீலம்தான் என்று சொல்ல வாய்ப்பளிக்காமல் கண்ணுக்கெட்டிய கடைசி புள்ளியில் பசுமை சற்று மங்கலாகவே தெரிந்தது. தங்களுக்குள் சம்பாஷித்துக் கொண்டிருந்த மரங்கள் இப்பொழுது கலகலவென சிரித்துப் பேசத் துவங்கியிருந்தன. நான் ஏரியைப் பார்ப்பதை கவனித்துவிட்ட அந்த ஒரு மரம் என் மீது பார்வையை சிறிது நேரம் நிறுத்தி திரும்பவும் தன் வேலையைப் பார்க்கத் துவங்கியிருந்தது. கடந்து செல்லும் மங்கையின் கடைக்கண் பார்வை பெற்றுவிட்ட புன்னகையுடன் நான்.
அப்படியே வலதுபுறம் பார்வையைத்திருப்ப அதற்கு நேர் எதிராய் ஆலையின் கழிவுகளை அளவுக்கதிகமாய் ஏராளமான புகைக்கக்கிகள்(புகைப்போக்கிகள் என்பது வீரியத்தைச் சற்று குறைப்பதாய்ப் படுகிறது எனக்கு) கக்கிக் கொண்டிருந்தன. நம் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அதிகரிக்க நம் வாழ்நாளை குறைத்துக் கொள்கிறோம்.

இறங்கி வரும்பொழுது ஒரு அரக்கு நிற வண்ணத்துப்பூச்சி ஒன்று என் கண்ணில் பட்டு விட்டுச் சென்றது. மனிதன்... பசு மாடு... தட்டான்..இவற்றையடுத்து அந்த வனத்தில்(ஆலை தான்)நான் கண்டுகொண்ட நடமாடும் உயிரினம்.. நினைவுக்கு வந்தது.... வண்ணத்துப்பூச்சியையும் கண்களால் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதே...வந்து இருக்கையில் அமர்ந்தபோது அரக்கு நிற வண்ணத்துபூச்சி திரும்பவும் என்னைச் சுற்றி சுற்றி வந்தது.முகத்திற்கு அருகே வந்து பறந்து விட்டு சற்று தள்ளி ஒரு சுற்று சுற்றி சென்றது. ஒரு வேளை அந்த மரம் எதாவது சேதி சொல்லி அனுப்பியிருக்குமோ? வாழ்த்து சொல்லியிருக்குமோ? எனக்கு எதற்கு வாழ்த்து?வேடிக்கை பார்க்க நாங்கள் என்ன உயிரற்ற பொம்மைகளா? பெரிய இவனாட்டம் உலா வந்து போகிறாய்? போடா... என்று திட்டியிருக்கும்.. ஆனால் நாங்கள் சந்தித்துக் கொண்டபோது எதுவும் சொல்லவில்லையே. முகத்தைத் திருப்பிக் கொண்டதே...
நாம்தான் அவைகளைப் புரிந்து கொள்ளவில்லை...அவைகள் நம்மை நன்றாகப் புரிந்து கொண்டுள்ளன..உணர்ந்து கொண்டுள்ளன.இல்லையென்றால் இவ்வளவு கொடுமைப் படுத்தும்பொழுதும் அதற்கான கடமைகளைச் செவ்வனே செய்து நமக்கு உதவியாய் இருந்து கொண்டிருக்குமா? ஆறறிவு நமக்கு.. மற்றதற்கெல்லாம் குறைவு என்று நாமாக நிர்ணயித்துக் கொண்டோம்.நல்லவேளை நமக்கிருக்கும் சிந்திக்கும் சக்தி அவற்றிற்கில்லை.இருந்திருந்தால் மனித இனம், மற்ற இனம் என்று போராடி மனித இனமே இருந்திருக்காது இன்று... என்றெல்லாம் சிந்தனை அதுபாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பில் ஆங்கில ஆசிரியர் பாடத்தின் ஊடே மரங்களுக்கு மட்டும் வாயிருந்தால் வரலாற்றை அதனிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றும் தான் பள்ளிக்கு வரும்போது நூறு வயதிற்கும் மேல் கணிக்கத்தகும் ஒரு ஆலமரத்தை தினமும் வியந்து பார்ப்பதாயும் சிலாகித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது.

அன்று அலுவல் காரணமாக வெளியில் சென்று விட்டு திரும்பி நுழைவாயிலில் காத்துக் கொண்டிருந்தேன் வாகனத்திற்காக.நேரமாகும் என்பதால் மரங்களின் நிழலில் நடந்து கொண்டு எதிரில் வரும்போது மறித்து ஏறிக்கொள்ளலாம் என நடக்கத் துவங்கினேன். உயிரைக் காக்க கவசம் வேண்டுமோ இல்லையோ..அங்கு மிதக்கும் தூசுகளிடமிருந்து காத்துக் கொள்ள கண்டிப்பாக கவசம் கட்டாயம் வேண்டும் எனத் தோன்றியது.வேலிக்கு அப்பால் இருக்கும் மரங்களுக்கூடாகவும் மண்டிக்கிடக்கும் செடிகளுக்கூடாகவும் புகுந்து செல்ல வேண்டும் போல் இருந்தது.என் பணியிடம் தவிர வேறு எங்கும் செல்ல அனுமதி இல்லாத எனக்கு அதெல்லாம் நடக்காத காரியம்.. வழியில் வேலியின் அருகில் கம்பிகளுக்குள் சிறைப்பட்டு சிரமப்பட்டு வளர்ந்து கொண்டிருந்த சில மரங்கள், இவர்கள் பிடுங்க மட்டுமில்லை சிலவற்றை நட்டதும் தெரிந்தது...உள்ளே ஊடுருவிப் பார்த்துக் கொண்டே நடந்ததில் ஒரு கிலோமீட்டருக்கும் மேல் நடந்து விட்டிருந்தேன்...உள்ளே செல்ல செல்ல தூசுகளும் காற்றில் அதிகம் மிதந்தன.. வேலியின் அருகில் புற்கள் அதிகமிருந்த இடத்தில் ஓரமாக நின்று கொண்டேன்..வெளியிலிருந்து உள்ளே செல்ல செல்ல பொலிவிழந்த மரங்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது.அவையாவும் தங்களின் அழகான பொழிவான முகத்தில் கரி பூசி விட்டதனால் முகத்தை யாருக்கும் காட்டாமல் தலையைக் குனிந்தவாறே இருந்தது மிகுந்த வேதனையைத் தந்தது. அவ்வப்போது காற்றில் அசைந்த இலைகளின் ஊடே, தூசுகளையும் கரியையும் உங்களின் மேல் பூசுவதால் எங்களை மன்னியுங்கள்.. எங்கள் மேல் தவறில்லை என்று கெஞ்சுவதும்.. அதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்..அவர்களை நிறைவாக்க எங்களை கரியாக்கிக் கொள்கிறோம் என்று மாறி மாறி ஆறுதல் சொல்வதுமான உரையாடல் என் காதில் விழுந்தும் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டேன். வேடிக்கை பார்த்தவன் அலைபேசியை எடுத்து வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே என்று மலர விட்டேன். சில நொடிகளில் எங்கிருந்தோ பறந்து எனக்கு சற்று தள்ளி அமர்ந்த வெள்ளைக் கொக்கு ஒன்று தன் நீண்ட மஞ்சள் அலகால் இரையைத் தத்தி தத்தி தேடியது, எனக்கு என் வெள்ளைப் பூக்கள் மலர்ந்த சத்தம் கேட்டு சத்தம் வந்த இடத்தை அது ஆராய்வதாய்ப் பட்டது. அதனுடன் துணையாக இன்னொரு கொக்கும் ஒரு மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சியும் சேர்ந்து கொண்டது. அட.. நீங்கள் எல்லாம் இன்னும் இங்குதான் இருக்கிறீர்களா! என்று வாய் திறந்து கேட்கவேண்டும் போல் இருந்தது.. நல்ல வேளை.. நம்மை விட அறிவு குறைந்தவைகளாக அவற்றின் அனுமதியின்றி நம்மால் நிர்ணயம் செய்யப்பட்டுவிட்ட எவற்றின் மொழியும் நமக்கு தெரியவில்லை. இல்லையெனில் மீளவே முடியாத குற்ற உணர்வில் மனிதன் வீழ்ந்திருப்பான்…..

எல்லாவற்றையும் அசை போட்டுக் கொண்டே பணியிடம் சென்று சேர்ந்தபோது 50 டன் எடை கொண்ட கம்ப்ரசர் ஒன்று ஒரு பெரிய வாகனத்தில் ஏற்றப்பட்டு ஊர்ந்து வந்ததை சிறிய
மரத்தின் கிளைகள் தடுத்துக் கொண்டிருந்ததால் அந்த கிளைகளை வெட்டுவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர்.. அந்த இடத்தை விட்டு நகர்ந்து கொண்டேன்... அதைக் காணச் சகிக்காமலும் மற்றும் என் அலுவலின் ஒரு பணியான தர நிர்ணயத் திட்டம் தயாரித்தலில் அந்த கம்ப்ரசரைப் பற்றியும் ஏதேனும் சேர்க்க வேண்டுமா என்ற நினைப்புடனும்..

Saturday, October 2, 2010

என் சகாக்கள்

தாயே!
எட்ட இருப்பதால் 
அற்றுவிட்டதோ பாசம்!
உன் கர்ப்பத்தில்தானே பிறந்தார்கள்!
என் சகோதரப் பாசம் மிச்சமிருக்கிறதே....

மாற்றான் பிள்ளைகளுக்கும் தாயாய் இருந்த நீ
உன் பிள்ளைகளுக்குப் பேயான தேனோ?!

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்..
குதறியிருக்கிறது இன்று...
போடி!
உன் கண்களை இறுக்க மூடிக்கொள்.

உன் இடக்கண்ணில் ஓர் துளிதான் அவர்கள்.
ஓர் துளிதான்... ரத்தத்தில் மிதக்கிறது திசை தெரியாமல்
அடடே.. உன் கண்ணீரின் சக்திதான் என்னே!

என்னை இன்று உலகம் தூற்றுகிறது
ஐயோ! இல்லை... இல்லை... தர்மம் தூற்றுகிறது
நாளை உன்னையும் தூற்றும்... காலமும் தூற்றும்

நாளை ஜெயிக்கப் போவது அவர்களே..
அப் பொழுதில்
உன் மடியைக் காட்டிலும் 
என் சகாக்களின் மடிதான் இனிக்கும் எனக்கு..
இன்று தாய்ப் பாசத்திலும் உன்னை விஞ்சிவிட்டார்கள்.
உன் குழந்தைகளாயிற்றே!
உன் மடியில் சுரக்கும் பாலுக்காக இன்றும் ஏங்குகிறார்கள் பாவம்!

கண்களை இறுக்க மூடிக்கொள்

நாளை நீ ஒப்பாரியே வைத்தாலும்
அப் பொழுது அது நீலிக்கண்ணீராகத்தான் அறியப்படும்  
விழிப்பாயா என் தாயே...

     - வெங்கடேசன்